பெட்ரோலுக்கு செளதி-இனி லித்தியத்துக்கு ஆப்கான்- சீனா வெயிட்டிங்.. தாலிபான்களுடன் உறவாடும் பின்னணி!
காபூல்/பெய்ஜிங்: பெட்ரோலுக்கு செளதி அரேபியாவை உலகம் நம்பி இருப்பது போல பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியத்துக்கு இனி ஆப்கானிஸ்தானை நம்பி இருக்க வேண்டும். அதுவும் ஆப்கானிஸ்தானுக்குள் மிக எளிதாக நுழையக் காத்திருக்கும் சீனாவின் கைகளுக்குதான் இது போகப் போகிறது என்பதுதான் பொருளாதார வல்லுநர்களின் பார்வை.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? என்ற வரிகள் சாலப் பொருந்தும் தேசம் ஆப்கானிஸ்தான். அத்தனை வளங்களும் நிறைந்த பூமி.
ஆனால் யுத்தங்களால் சீரழிந்து சின்னாபின்னமாகிப் போய்விட்டது அந்த நிலம். அன்று சோவியத் யூனியன்களுடன்.. பின்னர் முஜாஹிதீன்களுடன்... அதைத் தொடர்ந்து தாலிபான்களுடன்.. இப்போது வரை அமெரிக்காவுடன் என ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது ஆப்கான்.

ஆப்கான் மீது தடை
இதோ மீண்டும் தாலிபான்கள் தலையெடுத்துவிட்டார்கள்... ஆப்கானில் சோவியத் யூனியன் அதாவது இன்றைய ரஷ்யா ஏற்கனவே சரியான பாடம் கற்றுவிட்டது.. அமெரிக்காவும் 20 ஆண்டுகள் டேரா போட்டு அனுபவ பாடத்தை வாங்கி இருக்கிறது. இத்தனைக்குப் பின்னர் தாலிபான்கள் தலைதூக்கி இருக்கிறார்கள். தாலிபான்களை அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகள் பயங்கரவாதிகளாக சித்தரித்து பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானின் சொத்துகளை முடக்கி வைத்திருக்கிறது. சர்வதேச பன்னாட்டு நிதியமும் ஆப்கானுக்கான நிதி உதவிகளை நிறுத்தி வைத்திருக்கிறது.

சீனாவின் நேசக்கரம்
ஆனால் தாலிபான்கள் தலையெடுத்தது முதலே அவர்களுடன் நேசக்கரம் நீட்டி இருக்கும் நாடு சீனா. ஆப்கானிஸ்தானுக்கும் சீனாவுக்கும் சுமார் 70 கி.மீ. தொலைவுதான் எல்லைப் பகிர்வு. எல்லைப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள், சீனாவின் மேலாதிக்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழும் நிலையில்தான் உள்ளனர். ஆனால் தாலிபான்களுடன் சீனா நட்புக்கரம் நீட்டுவதால் கிளர்ச்சிகளுக்கான சாத்தியங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடுகிறது. இதுமட்டுமே பெரியண்ணன் சீனா, ஆப்கானில் மூக்கை நுழைக்க காரணமாகிவிட முடியுமா என்ன?

இலங்கையை கபளீகரம் செய்த சீனா
சீனாவுக்கும் இலங்கைக்கும் எந்த எல்லைத் தொடர்பும்தான் இல்லை. ஆனால் இலங்கைக்கு கடன்களை வாரி வாரி வழங்கி இன்றைக்கு அந்த நாட்டையே காலனி நாடாக்கிக் கொண்டிருக்கிறது சீனா. வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் தம்முடைய நிலப்பகுதியை 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு கொடுக்கிறது இலங்கை. அந்த பகுதி சீனாவின் சுயாட்சி பகுதியாகிறது. அங்கே இலங்கை சட்டங்கள் செல்லாதவை என்றாகிவிடுகிறது. எல்லை தொடர்பு இல்லாத இலங்கையை விழுங்கிய சீனா டிராகன் ஆப்கானிஸ்தானை மட்டும் நட்டாற்றில் விடுமா என்ன?

ஆப்கான் தாதுவளம்
அதுவும் அத்தனை அத்தனை இயற்கை வளம் மலைகளாக கொட்டி கிடக்கும் நிலப்பரப்பு ஆப்கான். செம்பு, நிலக்கரி, இரும்புத் தாது, கோபால்ட் என எண்ணற்ற தாதுக்கள் வளம் நிறைந்த பூமி. இனிவரும் காலம் மின்சார பேட்டரிகளின் காலம். அத்தனையும் பேட்டரிகளால் இயங்கப் போகிற காலம். இந்த பேட்டரி தயாரிப்புகளுக்கான லித்தியம் வளம் பெருமளவில் கொட்டிக் கிடக்கிறது ஆப்கானில். செளதி அரேபியால் கிடைக்கும் எண்ணெய் வளத்துக்கு இணையானது ஆப்கானின் லித்திய வளம். இந்த நாள் வரை மன்னராட்சிகளாலும் கலகங்களாலும் யுத்தங்களாலும் இவை கேட்பாரற்று கிடந்தன.

ஓங்க காத்திருக்கும் சீனாவின் கரங்கள்
அதுவும் ரஷ்யாவும் அமெரிக்காவும் யுத்தத்துக்கு வந்து திரும்பிப் போய்விட்டன. இப்போதைய தாலிபான் ஆட்சியாளர்களின் ஆகப் பெரும் தோழர் மிஸ்டர் சீனாதான். ஏற்கனவே சீனா நிறுவனங்கள் ஆப்கானில் உரிமம் பெற்றிருந்தாலும் யுத்தங்கள் அதை செயல்படுத்த விடாமல் தடுத்தன. இப்போது சகாவுகளாகிவிட்டனர் தாலிபான்கள்.. சப்தமே இல்லாமல் சண்டையே இல்லாமல் அத்தனை வளமும் சீனாவின் டிராகன் கைகளுக்குப் போகப் போகிறது. எல்லாமும் தாலிபான்கள் தங்களது கோரமுகத்தை காட்டி யுத்தத்துக்குப் போகாமல் இருக்கும் வரை என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications