0.5% ஓட்டுதான் சரிவு.. 40% தொகுதிகள் போச்சு! இது எப்பிடி சாத்தியம்? தலையை பிய்க்கும் காங்கிரஸ்
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பெரும் நம்பிக்கையுடன் ஆட்சி கனவில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 'மரண அடி' கிடைத்திருப்பதை அக்கட்சியினரால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. 2018 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் வாக்கு சதவீதம் 0.5% அளவுதான் குறைந்த போதும் 40% இடங்களை பறிகொடுத்தது எப்படி என்பதுதான் காங்கிரஸின் புலம்பலாக இருந்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மத்திய பிரதேசத்தில் பாஜக 163 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியை அறுவடை செய்தது. காங்கிரஸ் கட்சியோ வெறும் 66 இடங்களில்தான் வென்றது. பாஜகவின் வாக்கு சதவீதம் 48.55%; காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 40.40%. காங்கிரஸை விட 8.15% வாக்குகளை கூடுதலாக பெற்று அசத்தி இருக்கிறது பாஜக. மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளில் 70% இடங்களை பாஜக கைப்பற்றி இருக்கிறது.
2018 தேர்தலுடன் ஒப்பீடு: இதில் காங்கிரஸ் கட்சியினர் புலம்பும் இடமே 2018 தேர்தல் முடிவுகளை வைத்துதான். 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 40.89%. அப்போது 114 இடங்களில் காங்கிரஸ் ஜெயித்தது. 2018-ல் 41.02% வாக்குகள் பெற்ற பாஜக 109 இடங்களில் வென்றது. 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் அப்படியேதான் இருக்கிறது. வெறும் 0.5% அளவுதான் குறைந்து போயிருக்கிறது. 0.5% வாக்குகள் குறைவாக பெற்ற நிலையில் சுமார் 40% இடங்களை இழந்துவிட்டோம் என்பதுதான் காங்கிரஸுக்கு கிடைத்த அதிர்ச்சியாகும். பாஜகவோ கடந்த தேர்தலை விட 7% வாக்குகளை கூடுதலாகப் பெற்றுள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள் நலத் திட்டங்கள்: மத்திய பிரதேசத்தில் பாஜகவின் விஸ்வரூப வெற்றிக்கு காரணம் 'சர்க்கார்'கள்தான். ஆம் 'இரட்டை என்ஜின் சர்க்கார்கள்' முழு வீச்சில் செயல்பட்டதுதான் காரணம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுகள் இரண்டுமே மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தியதுதான் பெரு வெற்றிக்கான பிரதான காரணம் என்கின்றனர். இந்தத் திட்டங்களால் பயனடைந்த விவசாயிகள், பெண்கள் வாக்குகளை அள்ளி அள்ளி பாஜகவுக்கு கொடுத்திருக்கின்றனராம்.
தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்த அரசியல் ஆய்வாளர்கள், 10க்கு 7 வாக்காளர்கள் மத்திய அரசின் செயல்பாடுகளில் திருப்தி அடைந்ததால் பாஜகவுக்கு வாக்களித்திருக்கின்றனர். 10-க்கு 6 வாக்காளர்கள் மாநில அரசின் செயல்பாடுகளில் திருப்தி அடைந்து பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என சுட்டிகாட்டுகின்றனர்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை வியூகம்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸுக்குதான் சாதகமாக இருந்தன. இதனாலேயே படு உற்சாகமாக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை தேர்தல் களத்தில் சீக்கிரமாகவே வெளியிட்டது. இது ஒருவகையில் காங்கிரஸுக்கு உத்வேகத்தை கொடுத்தது. ஆனால் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை எப்படியான தாக்கத்தை மக்களிடத்தில் உருவாக்கி இருந்ததோ அதனை கவனித்து பதிலடி தரும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டு சமன் செய்தது. இதனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தொடக்கத்தில் ஏற்படுத்திய தாக்கம் தேர்தல் நெருங்கிய தருணத்தில் மெல்ல மெல்ல குறைந்தும் போனது. ம.பியில் நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள் வாக்குப் பதிவுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் யாருக்கு ஓட்டுப் போட வேணும் என முடிவு செய்ததாக கூறுகின்றனர். அதாவது தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கை ஆகியவற்றை கவனித்து இந்த முடிவு எடுப்பதாக கூறுகின்றனர். 10 வாக்காளர்களில் 4 பேர், வேட்பாளர்கள் யார் என்பதை வைத்து தீர்மானிக்கின்றனர். இத்தகைய வாக்காளர்களின் பெரும்பான்மை தேர்வு பாஜகவாக இருந்தது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
பாஜகவுக்கு எந்த தரப்பு ஆதரவு அதிகம்?: மத்திய பிரதேசத்தில் பாஜக அமோக வாக்குகளைப் பெற்றது, அதிக இடங்களைக் கைப்பற்றியது என்பதில் முதல் தலைமுறை மற்றும் இளைஞர்களின் வாக்குகள்தான் பெரும் பங்கு வகித்திருக்கிறது எனவும் புள்ளி விவரங்களை முன்வைத்து விவரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 18 வயது முதல் 35 வயது வாக்காளர்கள் பெரும்பகுதியினர் பாஜகவையே தேர்வு செய்திருக்கின்றனர். அதே நேரத்தில் முதியோர் வாக்குகளையும் பாஜக அள்ளியிருக்கிறது. காங்கிரஸும் பாஜகவும் பெற்றுள்ள முதியோர் வாக்குகளில் சொற்ப வித்தியாசம்தான். அதேபோல உயர் கல்வி பெற்றவர்களில் 10-ல் 6 பேர் பாஜகவையே ஆதரித்துள்ளனர். நகர்ப்பகுதி வாக்காளர்களும் கணிசமான அளவு பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல மத்திய தர வர்க்கத்தில் கணிசமானோரும் பொருளாதாரத்தில் பலம் வாய்ந்தவர்களும் பாஜகவுக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு தலித்துகள், முஸ்லிம்கள், பழங்குடிகளின் வாக்குகள் மொத்தமாக கிடைத்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அயோத்தி ராமர் கோவில்: மத்திய பிரதேச தேர்தல் களத்தில் அயோத்தி ராமர் கோவில் விவகாரம் பாஜகவுக்கு பெருமளவு கை கொடுத்தது எனவும் தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதேநேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முன்வைத்த 'இந்துத்துவா' ஆதரவு கருத்துகள் எதுவும் அக்கட்சிக்கு வாக்காக வந்து சேரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் காங்கிரஸை இந்துக்களுக்கு எதிரான ஒரு சக்தியாக; ராமர் கோவிலை எதிர்ப்பவர்களாகவும் பிரசாரம் செய்ததும் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை தந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸின் வியூகம்: ஒருங்கிணைந்த மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெல்வதற்காக பல மூத்த தலைவர்களை களம் காண வைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது. அர்ஜூன் சிங், சுக்லா சகோதரர்கள், கமல்நாத், திக்விஜய்சிங், மாதவ்ராவ் சிந்தியா, மோதிலால் வோரா, அஜித் ஜோகி என பல தரப்பட்ட தலைவர்களையும் களமிறக்கி அறுவடை செய்தது. இந்த பார்முலாவை இந்த தேர்தலில் பாஜக கையில் எடுத்தது. நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், கணேஷ் சிங் என ஏராளமான தலைவர்களை பாஜக களத்தில் இறங்கி வெற்றியை எளிதாக அறுவடை செய்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுகிறது.












Click it and Unblock the Notifications