ராகுல் காந்தி ஆளே மாறிட்டாரே..சதாம் உசேன் மாதிரி இருக்கிறார்.. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா கிண்டல்
அகமதாபாத்: ராகுல் காந்தி ஈராக் சர்வாதிகாரியான சதாம் உசேன் போன்று தனது தோற்றத்தை மாற்றிவிட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா விமர்சித்து இருப்பது கருத்து மோதலுக்கு வித்திட்டுள்ளது.
குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி குஜராத்தில் நிலவுகிறது.
திருச்சி சூர்யா சர்ச்சை: ட்விட்டரில் திமுக ராஜீவ் காந்தி - பாஜக அமர் பிரசாத் ரெட்டி உக்கிர மோதல்!
குஜராத் தேர்தல் களம்
பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரசாரத்தில் ஈடுபட்டார். முக்கிய அரசியல் தலைவர்களும் குஜராத்தில் பிரசாரம் செய்து வருவது குஜராத்தில் தேர்தல் களத்தை அனல் பறக்க வைத்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் பாஜகவுக்கு ஆதரவாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
ஜவஹர்லால் நேரு மாதிரி
அப்போது ஹிமந்த பிஸ்வ சர்மா, ராகுல் காந்தியின் தோற்றம் குறித்து பேசியது பாஜக- காங்கிரஸ் இடையே வார்த்தை யுத்தத்திற்கு வித்திட்டுள்ளது. இது தொடர்பாக ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருப்பதாவது:- நான் இப்போதுதான் பார்த்தேன். ராகுல் காந்தியின் தோற்றம் கூட மாறியிருக்கிறது. ராகுல் காந்தியின் புதிய தோற்றத்தில் எந்த தவறும் இல்லை என்று தொலைக்காட்சி பேட்டியில் கூட நான் கூறியிருந்தேன். ஆனால், உங்கள் தோற்றத்தை நீங்கள் மாற்ற வேண்டும் என்று நினைத்தால் சர்தார் வல்லபாய் படேல் அல்லது ஜவஹர்லால் நேரு மாதிரி தோற்றத்தை மாற்றியிருக்கலாம்.
சதாம் உசேன் போல மாறிவிட்டது?
காந்திஜி மாதிரி தோற்றத்தை மாற்றியிருந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால், உங்கள் முகம் சதாம் உசேன் போல மாறிவிட்டது? காங்கிரஸ் கட்சியின் கலாசாரம் இந்திய மக்களோடு ஒட்டாது என்பதே இதற்கு காரணம். இந்தியாவை ஒருபோதும் புரிந்து கொள்ளாதவர்களுடன் தான் நெருக்கமாக அக்கட்சி இருக்கும். தேர்தல் நடந்து முடிந்த இமாசல பிரதேசத்திற்கு ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை செல்லவில்லை. அதேபோல், குஜராத்திலும் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரை செல்லவில்லை.ஆனால் மாறாக தேர்தல் நடக்காத மாநிலங்களில் நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார். ஏனென்றால் செல்லும் இடங்களில் தோற்கடிப்படுவோம் என்று ராகுல் காந்திக்கு தெரியும்" என்றார்.
நர்மதா நதி நீர் ஒருபோதும் வந்திருக்காது.
அதேபோல், நர்மதா அணை திட்டத்திற்கு எதிராக போராடிய மேதா பட்கருடன் ராகுல்காந்தி மகராஷ்டிர மாநிலத்தில் நடைபயணம் சென்றது குறித்து விமர்சித்து பேசிய ஹிமந்த பிஸ்வ சர்மா, குஜராத் தண்ணீரை கிடைப்பதற்கு எதிராக மேதா பட்கர் சதி செய்தவர். மேதா பட்கரின் திட்டம் வெற்றி பெற்றிருந்தல் கட்ச் பகுதிக்கு நர்மதா நதி நீர் ஒருபோதும் வந்திருக்காது. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை விரும்பாதவர்களுடன் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார்" என்றார்.
தரம் தாழ்ந்த வகையில்
ஈராக் சர்வாதிகாரியான சதாம் உசேனுடன் ராகுல் காந்தியை ஒப்பிட்டு அசாம் முதல்வர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் எதிர்வினையாற்றியுள்ளது. இது தொடர்பாக அகமதாபத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மணிஷ் திவாரி கூறியதாவது:- "இதுபோன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை. பொது வெளியில் கண்ணியத்துடன் பேசுவது அவசியம் என்று நான் நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அசாம் முதல்வர் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருக்கிறார்" என்றார்.
வெள்ளை தாடியுடன் ராகுல்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ என்ற பெயரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். பெரும்பாலும் கிளீன் ஷேவ் செய்த முகத்துடன் வலம் வரும் ராகுல் காந்தி, தனது பாத யாத்திரையில் தற்போது வெள்ளை நிற தாடியுடன் வலம் வருகிறார். இந்த நிலையில் தான், ராகுல் காந்தியின் தோற்றத்தை ஈராக் சர்வாதிகாரியான சதாம் உசேனுடன் அசாம் முதல்வர் ஒப்பிட்டு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் வார்த்தை யுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது.