'திமுக பயத்தால்' அர்ச்சனாவை சஸ்பெண்ட் செய்ததா தமிழக அரசு?
டெல்லி/சென்னை: சிபிஐயின் கூடுதல் இயக்குநராகப் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அர்ச்சனா ராமசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பபட்டிருப்பது தமிழக காவல்துறை வட்டாரத்திலும், சிபிஐ வட்டாரத்திலும், மத்திய அரசிலும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசிடம் முன்கூட்டியே அர்ச்சனா ஒப்புதல் பெறவில்லை என்று இதற்குக் காரணம் கூறப்பட்டாலும் கூட வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன.
அர்ச்சனாவும், அவரது கணவரான முன்னாள் பொதுப்பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரமும் திமுக சார்பானவர்கள் என்ற முத்திரை காரணமாக, சிபிஐ பொறுப்பில் அர்ச்சனா போவதை சிலர் விரும்பவில்லை என்றும் இதனால்தான் அர்ச்சனாவை சிபிஐ பொறுப்புக்கு அனுப்ப தமிழக அரசுத் தரப்பில் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆரம்பத்திலிருந்தே இழுபறி
ஆரம்பத்திலிருந்தே அர்ச்சனா விவகாரத்தில் இழுபறி நிலவி வந்தது. குறிப்பாக சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பகம், மத்திய உள்துறை ஆகியவற்றுக்கு இடையே இதில் பெரும் பனிப்போரே மூண்டது.

அர்ச்சனா - பச்நந்தா
மத்திய உள்துறையும், ஊழல் கண்காணிப்பு ஆணையமும், பச்நந்தா என்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரியைத்தான் இந்தப் பதவிக்குப் பரிந்துரைத்திருந்தது. அர்ச்சனாவை அது ஏற்கவில்லை. ஆனால் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவோ, அர்ச்சானவைய நியமிக்க வலியுறுத்தி வந்தார்.

பிரதமர் ஒப்புதல்
கடைசியில், சிபிஐ இயக்குநரின் பிடிவாதமே வென்றது. அர்ச்சனாவின் பெயருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

தமிழகத்திலிருந்து இழுபறி
அதன் பின்னர் தமிழகத்திலிருந்து இழுபறி தொடங்கியது. அர்ச்சனாவை சிபிஐ பணிக்கு விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு கருத்து தெரிவிக்காமல், ஒப்புதலும் தெரிவிக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

2 முறை முதல்வரைப் பார்த்த அர்ச்சனா
இதையடுத்து இதுதொடர்பாக அர்ச்சனா ராமசுந்தரம், 2 முறை முதல்வர் ஜெயலலிதாவை நேரிலேயே சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் சொன்ன பதில் என்ன என்பது தெரியவில்லை.

டிஜிபி தரப்பில் இழுபறி
இதையடுத்து டிஜிபி ராமானுஜத்தை சந்தித்து இதுகுறித்து அர்ச்சனா புலம்பியதாக தெரிகிறது. அவரும் கூட பிடி கொடுத்துப் பேசியதாக தெரியவில்லை. மாறாக, நீங்கள் சிபிஐ பணியில் போய்ச் சேருங்கள், ரிலீவிங் ஆர்டர் பெற்றுத் தர நான் ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் கைவிட்ட சக்திகள்
இதை நம்பித்தான் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதலைக் கூடப் பெறாமல் அர்ச்சனா சிபிஐ கூடுதல் இயக்குநர் பொறுப்பை ஏற்றதாக தெரிகிறது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் சம்பந்தப்பட்டவர்களால் கைவிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுக பயம் காரணமா
இதற்கிடையே, அர்ச்சனாவை தமிழக அரசு எதிர்ப்பதற்கு திமுக பயம் ஒரு காரணம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

ராமசுந்தரம்.. புதிய தலைமைச் செயலகம்
கடந்த திமுக ஆட்சியில் மிகப் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தக் கட்டடம் கட்டப்பட்ட சமயத்தில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தவர் ராமசுந்தரம். ஐஏஎஸ் அதிகாரியான இவர், அர்ச்சனாவின் கணவர் ஆவார். திமுக தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர் இவர். அந்த சமயத்தில் சிபிசிஐடி பொறுப்பில் இருந்து வந்தார் அர்ச்சனா.

ஆட்சி மாற்றத்திற்கு முன்பே விலகல்
இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு முடிக்கப்பட் நிலையில் ராமசுந்தரம் திடீரென விருப்ப ஓய்வில் போய் விட்டார். அர்ச்சனாவும் கூட விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் போகவில்லை.

அர்ச்சனாவை சிபிஐ அதிகாரியாகப் பார்க்க விரும்பவில்லை
இப்படி அர்ச்சனா தரப்பு திமுக ஆதரவாளர்கள் என்ற முத்திரை வந்து விட்டதால் மிக முக்கியமான சிபிஐ பொறுப்பி்ல் அவர் அமர்வதை சிலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்தான் அர்ச்சனா சஸ்பெண்ட் ஆனதற்கான காரணமாக சிலர் கூறுகிறார்கள்.

மத்திய அரசு நினைத்தால்
தற்போது அர்ச்சனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்ற போதிலும் தொடர்ந்து அவர் சிபிஐ பொறுப்பை வகிக்க சட்டத்தில் இடம் உள்ளதாம். அதாவது மிகவும் அசாதாரணமான சூழல் எழும்போது மத்திய அரசின் உள்துறை நேரடியாக தலையிட்டு ஒரு ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரியை தான் விரும்பும் இடத்தில் பணியமர்த்த முடியும் என்கிறது அந்த விதி.

மாநில அரசின் அனுமதி தேவையில்லை
மேலும் இதற்காக மாநில அரசின் அனுமதியையும், ஒப்புதலையும் மத்திய அரசு எதிர்நோக்கி இருக்க வேண்டிய அவசியம் கிடையாதாம். ஆனால் அர்ச்சனா விவகாரத்தில் மத்திய அரசு அதிரடியாக செயல்படுமா என்று தெரியவில்லை.

தேர்தல் காலம்
தற்போது லோக்சபா தேர்தல் காலம். ஆட்சி மாற்றம் குறித்த பேச்சுக்கள் சூடாக உள்ளன. எனவே இந்த சமயத்தில் மத்திய அரசு அதிரடியாக செயல்பட முடியுமா. அதற்கு தேர்தல் ஆணையத்திடம் ஏதாவது அனுமதி பெற வேண்டுமா என்ற குழப்பங்கள் உள்ளன.

வழக்கு வேறு
இதற்கிடையே வினித் நாராயன் என்ற சமூக நல சேவகரும், ஊழல் எதிர்ப்பாளருமான ஒருவர் அர்ச்சனா நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். அது இன்று விசாரணைக்கு வருகிறது.
மொத்தத்தில் அர்ச்சனா விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மத்திய, மாநில அரசுகளிடையே மோதல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications