தமிழர்களை பணி நீக்கம் செய்வது குறித்து கேரள அரசு வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை!
இடுக்கி: கடந்த 10 ஆண்டுகாலமாகவே பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஆசிரியர்கள் உட்பட பல்வேறு பணிகளில் இருந்து கேரள அரசு நீக்கி வருகிறது. இது குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேரள - தமிழர் கூட்டமைப்பு அமைப்பாளரும் எழுத்தாளருமான பாலசிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கேரள - தமிழர் கூட்டமைப்பு அமைப்பாளரான பாலசிங்கம் விகடனுக்கு அளித்த பேட்டி:
இந்த பிரச்னை இன்று ஆரம்பிக்கவில்லை பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது 2005 -06 கால ஆண்டுகளிலேயே கேரளாவில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த தமிழர்களை கொத்து கொத்துதாக ஆட் குறைப்பு செய்து வீட்டிற்கு அனுப்பியது.
35 ஆண்டுகள் வேலை பார்த்தவர்களுக்கு வி ஆர் எஸ் கொடுக்கப்பட்டு, கையில் வெறும் 30 ஆயிரம் ரூபாயுடன் அனுப்பப்பட்டனர்.
அப்பொழுது இடுக்கி மாவட்டத்தில் மட்டுமே சுமார் 840 தமிழ் பள்ளிகள் இருந்தன. ஆனால் அவை எல்லாம் இன்று காணமல் போகிவிட்டது. அப்பொழுது அங்கிருந்து வந்த தமிழர்கள் தங்கள் குழந்தைகளோடு தேனி, திருநெல்வேலி ,தென்காசி ,ராஜபாளையம் தஞ்சாவூர் ,சென்னை என்று கிளம்பி போய் விட்டனர். அவர்கள் குழந்தைகள் படிப்பை பாதியிலேயே தமிழ் நாட்டில் தொடரும் நிலைமை உருவானது.
கல்வியை தொடர முடியாத நிலை
பிறகு எஞ்சி இருந்த தொழிலாளர்களின் குழந்தைகள் கேரளாவில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்து வந்தனர். பிறகு போதிய குழந்தைகள் இல்லை என்று படிப் படியாக ,ஒவ்வொரு எஸ்டேட்களில் இருந்த தமிழ் பள்ளிகளை மூடியது கேரளா அரசு. அதற்கு பிறகு வந்த அச்சுதானந்தன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு, கேரளாவில் அரசு வேலைகளில் இருக்கும் ஒவ்வொருவரும் மலையாளத்தில் கையெழுத்து போடாமல் அரசு சம்பளத்தை வாங்க முடியாது என்ற நிலைமையை உருவாக்கியது. அவர்களுக்கு மொழி வாழ்க்கை.. ஆனால் நமக்கு உணர்வு.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னவே இந்த பிரச்னை வந்து விட்டது நாம் அப்பொழுதே எதிர்க்கவில்லை. இப்பொழுது நிலைமை கை மீறி போய் விட்டது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ,கல்லூரிகளில் தமிழவே படிக்காமல் எங்கிருந்து வந்தாலும் ஒருவன் பட்டம் வாங்கி செல்லலாம். ஆனால் கேரளாவில் அப்படி இல்லை கண்டிப்பாக அவர்கள் மொழியான மலையாளத்தை கண்டிப்பாக ஒரு பாடமாக படிக்க வேண்டிய கட்டாயத்தில் வைத்து இருக்கிறது அங்கு இருக்கும் கல்வித்துறை. இதுதான் இன்றைய யதார்த்தம். தவிர அங்கு படிக்கும் தமிழர்கள் மலையாளத்தை மொழி பாடமாக படித்தாலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு என்று வரும் பொழுது அவர்கள் தமிழர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இதனால் கேரள அரசு துறைகளில் வேலைவாய்ப்பு விகிதமும் தமிழர்களுக்கு குறைவு அதனாலேயே அங்கு இருக்கும் பெரும்பாலான தமிழ்பிள்ளைகள் தேனி ,மதுரை திண்டுக்கல் ,என்று தமிழகத்தில் வந்து படிக்கின்றனர்.
கேரளத்தில் உள்ள 14 மாவட்டங்களில் தமிழர்கள் சுமார் 35 லட்சம் மக்கள் பரவலாக வாழ்கின்றனர். இடுக்கி ,தேவிகுளம் ,பீர்மேடு ,என்று தமிழர்கள் வாழும் பெரும் பகுதிகள் தேயிலை, மிளகு, நறுமண பொருள்கள் உற்பத்தி, சுற்றுலா என்று கேரளத்தின் மொத்த வருமானத்தில் 16 சதவிகிதம் தமிழர்களின் கடுமையான உழைப்பால் வருபவை இவை எல்லாம் பழைய மதுரை மாவட்டத்தில் ,பெரியகுளம் தாலுகாவாக இருந்தது. எப்பொழுது இந்த பகுதிகள் கேரளத்தின் கைகளில் போனதோ அப்போதே அங்கு தமிழர்கள் இரண்டாம் குடிமக்களாக நடத்தப்படும் நிலைமை உருவாகி இன்று நாம் அதை கண்கூடாகாக பார்க்கிறோம்.
இந்த தமிழ் ஆசிரியர் பணி குறைப்புக்கு கேரளா அரசு பள்ளிகளில் போதுமான குழந்தைகள் இல்லை அதனால் உபரியாக இருக்கும் ஆசிரியர்களை என்ன செய்ய முடியும் என்று கேட்டு, பணிகுறைப்பு என அவர்களை வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று சப்பையான காரணத்தை சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் தமிழகத்தில் உள்ள எல்லை பகுதி பள்ளிகளான குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மிக குறைவான அளவே மாணவர்கள் உள்ளனர் இதை வைத்து இங்கு பணியாற்றும் மலையாள ஆசிரியரை வீட்டுக்கு அனுப்பியதா தமிழக அரசு...? இல்லை.
சிறுபான்மையினரை மதிக்கிறோம்..
சித்தூர் பகுதி தெலுங்கு ஆசிரியர்களையும் ,கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள கன்னட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களையும், அந்த பகுதிகளில் இன்னும் குழந்தைகளே இல்லாமல் மிக குறைந்த அளவு உள்ள மாணவர்களை வைத்து பள்ளிகள் நடத்துகிறது என்று ஒருவரையாவது வீட்டுக்கு அனுப்பியாதா தமிழக அரசு? எதுவும் செய்யவில்லை. சிறுபான்மை மொழியை நாம் எவ்வளவு மதிக்கிறோம். ஆனால் செம்மொழியான தமிழ் மொழியை கேரளா அரசு உதாசீனபடுத்துகிறது. கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்தாலும் எல்லா அரசு அலுவலங்களிலும் தமிழர்கள் மலையாளத்தில் கடிதம், கோரிக்கை, விண்ணப்பம் எழுதினால் மட்டுமே வேலை நடக்கும். தமிழில் எழுதினால் அது கிழித்து போடப்படும். இதுதான் இன்றைய நிலைமை.
அதனால் அங்கு இதுவரை கடந்த பத்து ஆண்டுகளின் எத்தனை தமிழக பணியாளர்கள், என்ன என்ன பணிகளில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டனர் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.
அவர்களுக்கு பிரச்னை இது இல்லை. முல்லை பெரியாரில் அணை மட்டத்தை 142 அடியாக உயர்த்தினால் அங்கு அவர்களால் ஆட்சி நடத்த முடியாது. அவர்களுக்கு மான பிரச்னை...ஆனால் தமிழர்களுக்கு வாழ்வாதார பிரச்னை. இதனை வைத்து எதையாவது செய்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் கேரளத்து அரசியல்வாதிகள். தவிர பணியில் இருந்து தூக்கிய ஆசிரியர்களுக்கு வேறு அரசு பணிகள் கொடுக்க வேண்டும் என்று போராட போகிறோம்,
இவ்வாறு பாலசிங்கம் கூறியுள்ளார்.