வரதட்சணைதான் கொடுக்கிறோமே.. மகளுக்கு பரம்பரை சொத்தில் உரிமை உள்ளதா? மும்பை ஹைகோர்ட் முக்கிய தீர்ப்பு
கோவா: திருமணத்தின் போது மகளுக்கு வரதட்சணை வழங்கப்பட்டால் குடும்பச் சொத்தில் மகளுக்கு உரிமை இருக்கிறதா என்பது குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளையில் குடும்ப சொத்தில் மகளுக்குப் பங்கு தருவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. நான்கு சகோதரிகள் மற்றும் நான்கு சகோதரர்கள் உட்பட மொத்தம் 10 பேரை கொண்ட குடும்பத்தில் மூத்த மகள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
மறைந்த தனது தந்தை அன்டோனியோ மார்டின்ஸால் தன்னை வாரிசாக அறிவித்திருந்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். அப்படியிருக்கும் போது அவரது தாயும் சகோதரரும் இணைந்து குடும்பத்திற்குச் சொந்தமான கடையைச் சகோதரர் பெயருக்கு மாற்றியுள்ளனர்.
4 கிலோ தங்கம்.. மினி கூப்பர் கார்.. ரூ. 50 லட்சம் ரொக்கம்! குடிகார மாப்பிள்ளை கேட்ட
வழக்கு
இதை எதிர்த்தும் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தந்தை தன்னை வாரிசாக அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் மகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நான்கு சகோதரிகளுக்கும் திருமணத்தின் போது போதுமான வரதட்சணை வழங்கப்பட்டது. அதன் பிறகும், அவர்கள் ஒன்றாக இணைந்து கொண்டு சொத்தில் பங்கு கேட்கிறார்கள்.
கீழமை நீதிமன்றங்கள்
கடை உட்பட சொத்துகள் நிறுவனத்திற்குக் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அந்த சொத்துகளில் உரிமை கோர முடியாது. பத்திரம் மாற்றப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இத்தனை காலத்திற்குப் பிறகு அவர் வழக்கு தொடர்ந்துள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார். 1990ஆம் ஆண்டு சொத்துகளை மாற்றியிருந்தனர். அதில் முதலில் கீழமை நீதிமன்றம் 2003இல் தீர்ப்பளித்தது. கீழமை நீதிமன்றம் மகளின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
மும்பை ஐகோர்ட்
இருப்பினும், அதற்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டிலும் அவரது மனு தள்ளுபடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்ற கோவா பெஞ்சில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தான் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது குறித்து நீதிமன்றம் கூறுகையில், "பத்திரத்தை மாற்றி 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும் கூட, பெண்ணுக்குச் சொத்து மாற்றியது குறித்துத் தெரிந்து 6 வாரங்களில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஒரு பிள்ளைக்கு மட்டும் முடியாது
சட்டப்படி 3 ஆண்டுகள் வரை வழக்கு தொடர உரிமை இருக்கிறது. அந்த காலகட்டத்திற்குள்ளாகவே அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இதைக் காரணமாகச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோர முடியாது. சொத்தை மாற்றியது குறித்து மனுதாரருக்கு முன்பே தெரியும் என்பதை நிரூபிக்கச் சகோதரர்கள் தவறிவிட்டனர்" என்றார். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால்.. அனைவரது சம்மதத்திற்கு பிறகே சொத்துகளைக் குறிப்பிட்ட குழந்தைக்குத் தர முடியும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது.
சொத்து பகிர்வு
இதையும் குறிப்பிட்ட நீதிபதிகள், எனவே தாயாருக்குக் கடை உள்ளிட்ட தனது சொத்துகளை மற்ற பிள்ளைகளின் சம்மதம் இல்லாமல் மகன்களுக்கு மாற்ற அதிகாரம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இது குறித்து முன்பே வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகளையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். பேச்சுவார்த்தை மூலம் சொத்தை பிரித்ததாக சகோதரர்கள் சொன்னதை நீதிமன்றம் ஏற்கவில்லை, ஆவணங்களாக இல்லாமல் சொத்து பகிர்வு நடப்பதால் அது செல்லாது என்று குறிப்பிட்டனர். இறுதியாக, இந்த வழக்கில், சகோதரர்களின் வாதத்தை ரத்து செய்த நீதிபதி, மூத்த சகோதரிக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்தார்,
வரதட்சணை
இதன் மூலம், மகளின் அனுமதியில்லாமல் அவரது சகோதரர்களுக்குச் சொத்தை மாற்றியதை நீதிபதி எம்.எஸ்.சோனக் ரத்து செய்தார். பெண்களுக்கு போதிய வரதட்சணை வழங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, மகள்களுக்கு வரதட்சணை வழங்கப்பட்டதாகக் கருதப்பட்டாலும் கூட, திருமணத்திற்குப் பிறகு குடும்பச் சொத்தில் மகள்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அர்த்தம் இல்லை என்றார். மகள்களுக்கு குடும்ப சொத்தில் எப்போதும் உரிமை இருக்கிறது என்று தெரிவித்தார்.