”என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை பாஜகவை எதிர்த்து போராடுவேன்” ஹேமந்த் சோரன் ஆவேசம்!
ராஞ்சி: என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாஜகவுக்கு எதிராக போராடுவேன் என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் தமது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றிருந்தார் ஹேமந்த் சோரன். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் மனு கொடுத்தது.
இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கும் பரிந்துரையை ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதனால் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவி பறிபோகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் சொன்னது உண்மையா? இல்லையா? - எ.வ.வேலுவுக்கு பாஜக நாராயணன் கேள்வி!
முதல்வர் ஹேமந்த் சோரன்
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.231 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஹேமந்த் சோரன் தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் ஹேமந்த் சோரன் பேசுகையில், அரசியல் ரீதியாக எங்களுடன் போட்டியிட முடியாமல், எதிரிகள் அரசியலமைப்பு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துகின்றனர்.
அரசியல் பசி
அமலாக்கத்துறை, லோக்பால் மற்றும் வருமான வரித்துறையை பயன்படுத்தி ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி கவலை இல்லை. ஏனென்றால் இந்தப் பொறுப்பு எனக்கு மக்களால் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் அதிகாரப் பசியில் இல்லை. மக்கள் நலனுக்காக மட்டுமே அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பணியாற்றுகிறோம். இங்கே முதியவரோ அல்லது தனித்து வாழும் பெண்களுக்கோ ஓய்வூதியம் கிடைக்கும் என்று யாராவது நினைத்ததுண்டா? அவை மண்ணின் மகனால் சாத்தியமானது.
பாஜக மீது விமர்சனம்
ஜார்க்கண்ட் ஏழை மாநிலமாக இருப்பதால், மாநில மக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அதிக நிதியை அனுமதிக்குமாறு தனது அரசாங்கம் மத்திய அரசை வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் அனுமதி வழங்கவில்லை. உலக பழங்குடியினர் தினமான ஆகஸ்ட் 9 அன்று, நாட்டின் பிரதமரும் பழங்குடியின ஜனாதிபதியும் நாட்டின் பழங்குடி சமூகத்திற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பது கூட பொருத்தமானதாகக் கருதவில்லை.
போராடுவேன்
அவர்களின் பார்வையில் நாங்கள் பழங்குடியினர் அல்ல, 'வனவாசிகள்'. என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாஜகவுக்கு எதிரான போராடுவேன். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்த முயற்சிகள் நடக்கின்றன என்று விமர்சித்தார்.