மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன்: ராஜ்நாத்சிங்
டெல்லி: மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமையும் நிலையில் அமைச்சரவையில் இடம்பெறப் போவதில்லை என்று அக்கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ராஜ்நாத்சிங் கூறியதாவது:
நான் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர். எனக்கான பொறுப்புகள் என்று தனியே இருக்கின்றன. நான் கட்சித் தலைவராக இல்லாத நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி அமையும் போது அமைச்சரவையில் இடம்பெறலாம்.
என்னுடைய சகாக்கள் பலரும் மத்திய அரசில் இடம்பெற தகுதியானவர்களே. நான் கட்சித் தலைவராகவும் இருந்து கொண்டு மத்திய அரசில் இடம்பெற விரும்பவில்லை. மத்திய அரசில் அதிகார மையம் என்பது ஒரு இடத்தில்தான் இருக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு.
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடிதான் பிரதமராவார். அவர்தான் அரசை வழிநடத்துவார். அதைத்தாண்டி எந்த ஒரு மாற்று திட்டமும் எங்களிடம் இல்லவே இல்லை.
இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.