வாழ்வோ, சாவோ.. மோடியை அரசியலை விட்டு விரட்டாமல் ஓய மாட்டேன்.. மமதாவின் ஆவேசம்!
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியை இந்திய அரசியலிலிருந்து அகற்றுவது தனக்கு வாழ்வா, சாவா போராட்டம் போன்றது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
ரூபாய் நோட்டு விவகாரத்திற்காக நாடு தழுவிய அளவில் இன்று எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷ் திவாஸ் என்ற பெயரில், தர்ணாக்கள் நடத்தின. இதேபோல மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய போராட்டத்திற்கு தலைமையேற்ற அக்கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இவ்வாறு உணர்ச்சிகரமாக பேசினார்.
பிரதமரர் மோடி திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டதன் மூலம், மக்கள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வியாபாரம், சினிமா தியேட்டர்கள் என அனைத்து தரப்பிலும் அதன் தாக்கம் இருப்பதாகவும் மம்தா குற்றம்சாட்டினார்.
மோடி திடீரென கடவுளை போல காட்சியளித்து நாடகமாடுகிறார். ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கான தேவை யாருக்கு இருக்கிறது என்பது குறித்து ஒரு வார்த்தை கூட கேட்காமல் பிரதமர் தான்தோன்றி தனமாக இபப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நலனுக்காக பிரதமர் மோடியை இந்திய அரசியலில் இருந்தே அகற்ற நான் தொடர்ந்து போராடுவேன். செய் அல்லது செத்துமடி என்பதை போன்ற ஒரு போராட்டத்தை நான் நடத்துவேன். இவ்வாறு ஆவேசமாக பேசினார் மம்தா பானர்ஜி.