காய்ச்சலாம்... அன்னா ஹசாரேவை சந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டம் ரத்து
புனே: உடல்நலக் குறைபாடு காரணமாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அன்னா ஹசாரேவைச் சந்திக்கும் திட்டம் ரத்து செய்யப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வலுவான லோக்பால் மசோதா வேண்டி அன்னா ஹசாரே மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தனது ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்கக் கூடாது என அக்கட்சியின் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்றைய உண்ணாவிரத கூட்டத்தில் வைத்து அன்னா ஹசாரேவைச் சந்திக்க இருப்பதாகத் நேற்று தெரிவித்திருந்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், தற்போது காய்ச்சல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால், அன்னா ஹசாரே சந்திப்பு ரத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து போராட்டம்...
நீண்ட காலமாக வலுவான லோக்பால் மசோதாவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடி வருகிறார் அன்னா ஹசாரே. இதற்காக ஏற்கனவே அவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளார்.

நடப்புத் தொடரிலாவது...
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே வலுவான லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற என்றும் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.

இன்று 3வது நாள்...
இதற்காக, நேற்று முந்தினம் தமது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் தொடங்கியுள்ளார். ஹசாரேவுடன் அவரது ஆதரவாளர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

உறுதிப் போராட்டம்...
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்ப மாட்டேன், வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப் படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட மாட்டேன் என்ற உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் அன்னா ஹசாரே.

வரவேற்பு இல்லை...
இந்நிலையில், அவரது உண்ணாவிரதப் போராட்டதில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லையாம். இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் யாரும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

ஆம் ஆத்மி உத்தரவு...
அதற்குக் காரணம் கட்சி மேலிடத்தில் இருந்து வந்த தடை உத்தரவு தான் எனத் தெரிகிறது.அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தில் தனது கட்சித்தொண்டர்கள் பங்கேற்க வேண்டாம் என ‘ஆம் ஆத்மி' கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பதிலடி...
இதுபற்றி அந்தக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசாரத்தின்போது தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதினார். அதை கவனத்தில் கொண்டுதான் இப்போது அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்க விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.

ஹசாரே உத்தரவு...
ஆயினும், அன்னா ஹசாரே ஆதரவாளர்களோ, ஆம் ஆத்மிகட்சியினர் இப்போராட்ட மேடைக்கு வரக் கூடாது என ஹசாரே உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

அனுமதியில்லை....
உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கிய நாளன்று அன்னா ஹசாரே, ‘ஆம் ஆத்மி கட்சியினர் யாரும் எனது மேடை ஏற அனுமதியில்லை. காரணம் அவர்கள் அரசியலில் உள்ளனர்' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு....
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. நாளை ( அதாவது இன்று ) அவரைச் சந்திக்க இருக்கிறேன்' என நேற்றுத் தெரிவித்திருந்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ரத்து...
இந்நிலையில், காய்ச்சல் காரணமாக இன்று தனது குருவான அன்னா ஹசாரேவை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல் நலமடைந்தவுடன் மீண்டும் சந்திக்கும் திட்டம் உள்ளதா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications