நாடாளுமன்றம் கூட்டத்தொடர் தொடங்கியது: எஸ்எஸ்ஆர், தியோராவுக்கு அஞ்சலி
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரைஒருமாதம் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் மத்தியஅமைச்சர் முரளி தியோரா, நடிகரும் முன்னாள் ராஜ்யசபா எம்.பியுமான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில் திட்ட கமிஷன் கலைப்பு, கருப்புப் பண விவகாரம், குஜராத் கலவரம் தொடர்பான நானாவதி கமிஷன் அறிக்கை, எல்லையில் சீன ராணுவ ஊடுருவல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.
மேலும் இந்த கூட்டத் தொடரில் இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட 67 மசோதாக்களை நிறை வேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த மே மாதம் பதவியேற்றது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 14 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் எதிர்க் கட்சிகளின் அமளியால் மக்கள வையில் 14 மணி நேரமும் மாநிலங்களவையில் 34 மணி நேரமும் வீணானது. எனினும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா, செபி மசோதா உட்பட 13 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன.
நிலுவையில் 67 மசோத்தாக்கள்
தற்போதைய நிலையில் நாடாளுமன்றத்தில் 67 மசோ தாக்கள் நிலுவையில் உள்ளன. இவைதவிர புதிய மசோதாக்களை தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்சூரன்ஸ் திருத்த மசோதா, சரக்கு-சேவை வரி மசோதா, நிலக்கரி சுரங்க அவசரச் சட்டம், மோட்டார் வாக னச் சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நிலம் கையகப் படுத்தும் சட்டம், தொழிலாளர் சட்டங்கள், ரயில்வே சட்டங்களில் மத்திய அரசு முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதாக்களுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனால் குளிர்கால கூட்டத்தொடர் மோடி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நம்பிக்கை இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறும் என பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணப்படும் என கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் இரங்கல்
இதனிடையே இன்று லோக்சபா, ராஜ்யசபாவில் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோராவின் மறைவுக்கும், மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து இரண்டு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.