கருப்பு பண விவகாரம்- நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் அமளி- சபை நடவடிக்கைகள் பாதிப்பு!!
டெல்லி: நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபாவில் கருப்புப் பண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தியதால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் டிசம்பர் 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட 67 மசோதாக்களை நிறை வேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில் திட்ட கமிஷன் கலைப்பு, கருப்புப் பண விவகாரம், குஜராத் கலவரம் தொடர்பான நானாவதி கமிஷன் அறிக்கை, எல்லையில் சீன ராணுவ ஊடுருவல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது என்று எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருந்தன.
இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியாரோ உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று 2வது நாளாக நாடாளுமன்றம் கூடியது. காலையில் இரு சபைகளும் கூடியது முதலே திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி எம்.பிக்கள் ஒன்றாக எழுந்து கருப்புப் பண விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து உடனே விவாதிக்க வேண்டும்; கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.
லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இருக்கையை முற்றுகையிட்டும் அவர்கள் முழக்கங்களை தொடர்ந்து எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து லோக்சபா பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு சபை கூடியது.
ஆனால் பெரும் அமளிக்கு இடையே ராஜ்யசபா நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன. அமளி தொடரவே சபை நடவடிக்கைகளை பகல் 1 மணி வரை ஒத்திவைப்பதாக ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார்.