அடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம்
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சனா என்பவர் 39 மனைவி, 94 குழந்தைகள் என மொத்தம் 180 உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக் காலத்தில் ஒருவர் 180 உறுப்பினர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா!
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜியோனா சனா. 75 வயதாகும் இவர்தான் உலகிலேயே மிகப் பெரிய குடும்பத்தின் தலைவர்.

180 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய குடும்பம்
இவரது குடும்பம் அழகிய மிசோரம் மாநிலத்தின் இந்தியா-வங்கதேச எல்லையிலுள்ள செர்ச்சிப் மாவட்டத்தில் உள்ள பக்தாங் என்ற கிராமத்தில் வசிக்கிறது. ஜியோனா சனாவுக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 குழந்தைகள். 14 மருமகள்கள், 33க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனர். சுமார் 180 குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட இந்த குடும்பம் பக்தாங் கிராமத்தில் நான்கு மாடிகளைக் கொண்ட "சுவான் தார் ரன்"(புதிய தலைமுறையின் வீடு ) என்ற மிகப் பெரிய வீட்டில் வசிக்கிறது.

17 வயதில் முதல் திருமணம்
ஜியோனா சனா தனது 17 வயதில் முதல் மனைவியான ஜாதியாங்கியை மணந்தார். அவர் ஜியோனா சனாவை விட மூன்று வயது மூத்தவர். தற்போது ஜாதியாங்கிதான் குடும்பத்தின் வீட்டு நடவடிக்கைகளைக் கடுமையான ஒழுக்கத்துடன் பார்த்துக்கொள்கிறார். அதன் பின்னர் ஒரே ஆண்டில் பத்து பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர்.

சுழற்சி முறையில் ஜியோனாவுடன் நேரத்தைச் செலவிடும் மனைவிகள்
இவரது மிகப் பெரிய மாளிகையின் தரை தளத்தில் இருக்கும் இரட்டை படுக்கையறையில் ஜியோனா வசிக்கிறார். சுழற்சி அடிப்படையில் அவரது மனைவிகள் அவருடன் நேரத்தைச் செலவிடுகின்றனர். இளம் வயதுடைய மனைவிகள் அவருடன் ஒரு வாரம் வரை நேரத்தைச் செலவிடுகின்றனர். மேலும், அவரது தேவைகளைப் பூர்த்தி செய்ய எப்போது ஏழு முதல் எட்டு மனைவிகள் அவர் அருகிலேயே இருக்கின்றனர்.

அருகிலேயே இருக்கும் இளம் வயது மனைவிகள்
அவரது 39 மனைவிகளில், 22 பேர் 40 வயதிற்குப்பட்டவர்கள். இளம் வயது மனைவிகள் தரைதளத்தில் அவரது ரூம்மிற்கு அருகில் இருக்கும் அறைகளில் தங்குகின்றனர். வயதான மனைவிகள் அனைவரும் மாளிகையின் முதல் மாடியில் உள்ளனர். மேலும், மனைவிகள் தங்களுக்குள் போட்டி, பொறைமை இல்லை என்றும் கூறினர். இவருக்கு 26 மருமகன்களும் உள்ளனர். மேலும் அவரது மகள்கள் தங்கள் குடும்பங்களுடன் தனித்தனியாக வாழ்கின்றனர்.

சொந்தமாகப் பள்ளியைக் கட்டிய ஜியோனா
ஜியோனா தனது மகன்கள், பேரன்களுக்காக ஒரு பள்ளியையும் நிறுவியுள்ளார். மேலும் அவரது தம்பி பள்ளியின் செயல்பாட்டைக் கவனித்து வருகிறார். பள்ளியில் இருக்கும் பாடத்திட்டங்கள் அரசு பரிந்துரைகளுக்கு ஏற்றபடி அமைந்திருந்தாலும், ஜியோனா குறிப்பிட்ட சில பாடங்களைச் சேர்த்துள்ளார். இந்தப் பள்ளியை நடத்த அவர் அரசிடம் எந்த உதவியும் பெறுவதில்லை.

வேலைகளைப் பிரித்துக்கொள்ளும் குடும்ப உறுப்பினர்கள்
குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்கள் வேலைகளைப் பிரித்துக் கொள்கின்றனர். அவரது மனைவிகள் சமையல் செய்கிறார்கள், மகள்கள் வீட்டைச் சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்ற வேலைகளைக் கவனித்துக் கொள்கிறார்கள். அதேபோல வீட்டிலிருக்கும் ஆண்கள் கால்நடை வளர்ப்பு, விவசாயம், சிறிய குடிசைத் தொழில்கள், அலுமினிய பாத்திரங்கள் தயாரித்தல் ஆகியவற்றைப் பார்த்துக்கொள்கிறார்கள்.

நமக்கு நாமே
ஜியோனா தனது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருள்களையும் அவரது நிலத்திலேயே உற்பத்தி செய்து கொள்கிறார். முடிந்தவரை வெளிநபர்களிடம் இருந்து எந்தப் பொருள்களையும் வாங்குவதில்லை. மேலும், குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் ஜியோனாவே பெயரிட்டுள்ளார். தனது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் பெயர்களையும் தனக்கு எப்போதும் நினைவில் இருக்கும் என்று அவர் பெருமிதத்துடன் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications