டெல்லியில் ஆட்டோவிலிருந்து கடத்தி 25 வயது பெண் பலாத்காரம் - 5 பேர் கைது
டெல்லி: டெல்லியில் ஆட்டோவில் இருந்து கடத்தி, பெண் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து விரைந்து செயல்பட்ட டெல்லி போலீசார் குற்றவாளிகள் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் நேற்றிரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த நான்கு பேர் ஆட்டோவை மறித்து அப்பெண்ணைக் கடத்தியுள்ளனர்.
ராணுவ குடியிருப்பு பகுதிக்கு அப்பெண்ணைக் கொண்டு சென்ற கும்பல், அங்கிருந்த மற்றொரு நபருடன் சேர்ந்து அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், நள்ளிரவு வேளையில் தெற்கு டெல்லியில் உள்ள கான்பூர் பகுதியில் சாலையோரமாக அப்பெண்ணை வீசிச் சென்றுள்ளனர்.
மயங்கிய நிலையில் கிடந்த அப்பெண்ணை மீட்ட போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பெண் முதலில் பயணம் செய்த ஆட்டோ டிரைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து பலாத்காரம் செய்த 5 பேரையும் போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
இதேபோல், டெல்லி ஜோதி நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி, பலாத்காரமாக கற்பழித்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆட்டோவில் இருந்து இளம்பெண்ணை கடத்தி 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவத்தால் டெல்லி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.