பாட்னா குண்டு வெடிப்பு: தீவிரவாதிகளுக்கு உதவியதாக மங்களூருவில் பெண் கைது
பாட்னா: பாட்னா குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு உதவிய பெண்ணை மங்களூருவில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 6 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பாஜக நிர்வாகி பங்கஜ் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை. அத்துடன் மேலும் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்ததாக கூறி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரு அருகேயுள்ள பஞ்சிமுகர் பகுதியைச் சேர்ந்த ஆயிஷா பானு என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆயிஷாவின் கணவர் பெயர் ஜுபேர். குடகு மாவட்டத்தைச் சேர்ந்த பீரய்யாவின் மகளான இந்திரா, 18 ஆண்டுகளுக்கு முன்பு பஜ்பே பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் வீட்டில் பணிபுரிந்த போது, ஜூபேரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் மதம் மாறி ஆயிஷா பானுவாக பெயரை மாற்றினார்.
பீடி முகவராக இருந்த ஜுபேர் பின்னர் துபைக்குச் சென்று பணிபுரிந்தாராம். அப்போது இந்தியாவிலிருந்த ஆயிஷா பானுவை ஹவாலா பணம் மாற்றுவதற்கு பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
பாட்னா குண்டுவெடிப்பு குறித்து வழக்குப் பதிந்த போலீஸார், சிலரைக் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மங்களூருவில் ஆயிஷாபானுவை கைது செய்த போலீஸார் மங்களூர் 3-ஆவது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தினர்.
விசாரணைக்குப் பிறகு ஆயிஷாபானுவை பாட்னா போலீஸாரிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆயிஷா பானு, குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நிதி பெற்று, ரூ. 5 கோடி வரை உதவி செய்துள்ளார். 35 வங்கிக் கணக்குகளில் பணப் பரிமாற்றம் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications