பெண்ணை ஈவ் டீஸிங் செய்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த திமிர் ஆசாமி இவர் தான்!
டெல்லி: டெல்லியில் பெண் ஒருவர் டிராபிக்கில் தன்னிடம் அசிங்கமாக பேசி ஈவ் டீஸிங் செய்த நபரை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டதுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் திலக் நகரில் இரவு 8 மணி அளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவரிடம் அசிங்கமாக பேசி ஈவ் டீஸிங் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அவரை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார்.
இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
திலக் நகரில் இரவு 8 மணி அளவில் ஒரு ஆண் அசிங்கமாக என்னிடம் பேசினார். அவர் வெள்ளி நிற ராயல் என்பீல்டு வாகனத்தில் வந்திருந்தார். அவரது வாகன எண் டிஎல் 4எஸ் சிஇ 3623. அவரை நான் புகைப்படம் எடுத்து போலீசில் புகார் அளிக்கப்போகிறேன் என்று அவரிடம் கூறினேன்.
அதற்கு அவர் என்ன வேண்டுமானாலும் செய். புகார் கொடு அதன் பிறகு நான் என்ன செய்கிறேன் என்று மட்டும் பார் என்று மிரட்டினார் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் டிராபிக் சிக்னலில் நடந்துள்ளது. அங்கிருந்த 20 பேர் இதை வேடிக்கை பார்த்துள்ளனரே தவிர யாரும் உதவ முன் வரவில்லை. ஈவ் டீஸிங் நபர் மீது அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண் ஃபேஸ்புக்கில் போட்டுள்ள போஸ்ட்டை 75 பேர் லைக் செய்துள்ளனர், 14 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.