ஜம்மு காஷ்மீர்: ஒரே மாதத்தில் 7-வது படுகொலை- பண்டிட் சமூக ஆசிரியையை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்!
குல்காம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான 370வது பிரிவு நீக்கம், யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு உள்ளிட்டவைகளுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தொடர்ச்சியாக வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் அண்மைக்காலமாக பண்டிட் சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குல்காம் மாவட்டத்தில் பெண் ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஆசிரியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிரியை உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்தில் இது 7-வது படுகொலை சம்பவமாகும். கடந்த 12-ந் தேதி பட்காம் மாவட்டத்தில் ராகுல் பட் என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த வாரம் டிவி நடிகை அம்ரீன் பட் , லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதனிடையே ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மோதல்களில் கடந்த சில நாட்களில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் உமர் பரூக், மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications