டெல்லியில் கொடூரம்... தாய், 2 குழந்தைகள் கொலை... தூங்குவது போல் நடித்து தப்பிய 3 வயது சிறுமி!
டெல்லி: டெல்லியில் வீடு புகுந்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக அடித்துக் கொன்ற மர்மநபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது தூங்குவது போல் நடித்ததால், 3 வயது குழந்தை மட்டும் உயிர் தப்பியுள்ளது.
டெல்லி ரகுபீர் நகரில் உள்ள 5 மாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் ஷாபர். இவரது மனைவி சப்னம் (27). இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன்.
சம்பவத்தன்று ஜெய்ப்பூரில் இருந்து வீடு திரும்பிய ஷாபர் வீட்டுக் கதவை வெகுநேரம் தட்டியுள்ளார். பின்னர் தான் கதவு தாழ் இடம்படாமல் திறந்திருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கே சப்னம், அவரது ஒரு மகள் மற்றும் மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். மூன்று வயது பெண் குழந்தை மட்டும் அழுதபடி ஓடி வந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஷாபர், உடனடியாக மனைவி மற்றும் குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஷாபர் வீட்டு உரிமையாளரைக் கைது செய்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். காரணம் சமீபகாலமாக ஷாபருக்கும் , அவரது வீட்டு உரிமையாளர் பரீக்கிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டைக் காலி செய்து விட ஷாபர் முடிவு செய்துள்ளார். ஆனால், அட்வான்ஸ் பணத்தை தர பரீக் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், ஷப்னத்தை கொல்லும் நோக்கிலேயே கொலையாளிகள் வந்திருக்க வேண்டும் என்றும், குழந்தைகள் அடையாளம் காட்டி விடுவார்கள் என்பதால் அவர்களையும் சேர்த்து கொன்றிருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உயிர் தப்பிய பெண் குழந்தை, சம்பவத்தின் போது உறங்குவது போல் நடித்ததால் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications