பாஜக ஆளும் உபி, பீகாரில்தான் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை... பிரதமர் மோடிக்கு மமதா பதிலடி
சிலிகுரி: பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்தரப்பிரதேசம், பீகாரில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாகவே உள்ளனர் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் களைகட்டியுள்ளது. கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
மே.வங்கத்தில் மமதா அரசால் சீரழிக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகளை சீரமைப்போம்: பிரதமர் மோடி
பிரதமர் மோடி சாடல்
இந்த கூட்டத்தில் முதல்வர் மமதா பானர்ஜியை மிக கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. மேற்கு வங்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் அரசும் மமதா பானர்ஜியும் நாசமாக்கிவிட்டதாகவும் பிரதமர் மோடி சாடினார்.
சிலிண்டர் உயர்வுக்கு எதிர்ப்பு
அதேநேரத்தில் சிலிகுரியில் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மமதா பானர்ஜி பாதயாத்திரை நடத்தினார். மமதாவின் இந்த பாதயாத்திரையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரமாண்ட சிலிண்டர் கட் அவுட்டுகளை தலையில் சுமந்தபடி தொண்டர்கள் பங்கேற்றனர்.
டெல்லியில்தான் மாற்றம் தேவை
அப்போது பேசிய மமதா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் மாற்றம் வேண்டும் என்கிறார் பிரதமர். மத்தியில்தான் ஆட்சி மாற்றம் தேவை. மேற்கு வங்கத்தில் மாற்றம் தேவைப்படாது. நமது மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார் பிரதமர் மோடி.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
பாரதிய ஜனதா கட்சி ஆளுகிற உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில்தான் உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாங்கள் யாருடனும் சேர்ந்து கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் மோடி- அமித்ஷா கூட்டணியை பற்றி இந்த நாடு நன்கு அறியும்.
விலைபேசும் பாஜக
பாஜக பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. பாஜக தரும் பணத்தை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள். ஆனால் வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு போடுங்கள். இவ்வாறு மமதா பானர்ஜி பேசினார்.