குர்கானில் நடந்த "ரோமியோ" வேட்டையில் 53 பேர் கைது.. 3 பெண்களும் சிக்கினர்!
குர்கான்: ஹரியானா மாநிலம் குர்கானில் முக்கிய சாலை ஒன்றில் பெண்களை கிண்டல் செய்தல் உள்ளிட்ட தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.
குர்கானில் உள்ள மெக்ராலி - குர்கான் சாலையில் (எம்.ஜி. சாலை) பல முக்கிய ஷாப்பிங் மால்கள் மற்றும் நைட் கிளப்புகள் அமைந்துள்ளன. எனவே எப்போதும் இந்த சாலை பெண்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாகக் காணப்படும்.

இதனைப் பயன்படுத்தி பெண்களைச் சிலர் ஈவ்டீசிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எனவே, அத்தகையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையாக ரோமியோ ப்ரீ குர்கான் என்ற ஆபரேஷனை குர்கான் போலீசார் நடத்தி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமையன்று இதே சாலையில் நடந்த அந்த ஆபரேஷனில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 21 பேர் பெண்கள் ஆவர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் அந்த ஆபரேஷனை குர்கான் போலீசார் மேற்கொண்டனர். இதில், 3 பெண்கள் உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஏசிபி தர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப்பகுதியில் விபச்சாரம், குடித்து விட்டு வண்டி ஓட்டுவதால் விபத்துக்கள், சண்டை உள்ளிட்டவை நடப்பதாக தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
அதோடு, இந்த எம்.ஜி. சாலையை பாதுகாப்பானதாகவும், பயமில்லாததாகவும் மாற்றுவதற்காகவே இந்த ரோமியோ ப்ரீ குர்கான் ஆபரேஷன் நடத்தி வருவதாகவும் தர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications