சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: ராஞ்சியில் அலை அலையாய் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. டெல்லி, லக்னோவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வெள்ளிக்கிழமை முதல் இப்போராட்டங்களை நடத்தி வந்தனர்.
Recommended Video
இவர்களை அப்புறப்படுத்த போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையாகின. கடும் குளிரிலும் போராட்டம் நடத்திய பெண்களின் உடைமைகள், உணவுப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த வீடியோக்கள் சர்ச்சையாக வெடித்தன.

ராஞ்சி போராட்டம்
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் சனிக்கிழமையன்று சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

குடும்பங்களாக பங்கேற்பு
சாதாரண கூலி தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், உயர் கல்வி படித்தவர்கள் என பல்வேறு தரப்பு பெண்களும் குடும்பம் குடும்பமாக சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை உறவினர்கள் வீடுகளில் விட்டுவிட்டு போராட்டத்தில் பெண்கள் பங்கேற்றனர்.

மாணவர்களும் பங்கேற்பு
தங்களுக்கு அன்றாட வருமானத்தை தரக் கூடிய கடைகளை அடைத்துவிட்டும் பெண்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆவணங்கள் ஏன்?
இது தொடர்பாக கருத்து தெரிவித்த போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், நாங்கள் இந்தியர்களாகவே வாழ்கிறோம். எதற்காக இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்களை காட்ட வேண்டும் என்று ஆவேசப்பட்டனர். மேலும் பிரதமர் மோடியை விட வாஜ்பாய் ஆட்சிக் காலம் நன்றாகவே இருந்தது எனவும் சுட்டிக்காட்டினர்.

சர்வாதிகார போக்கு
அத்துடன் மத்திய அரசின் சி.ஏ.ஏ. என்பது ஒரு கறுப்புச் சட்டம்; இச்சட்டத்துக்கு எதிராக இப்போது போராடாமல் நாங்கள் எப்போதுதான் போராடுவது? எனவும் ஆவேசத்தை காட்டினர். தற்போதைய சர்வாதிகார போக்கை தொடர நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications