முல்லை பெரியாறு அணையை மத்திய போலீஸ் பாதுகாப்பில் விட முடியாது: உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய போலீசாரை அனுமதிக்க முடியாது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணையை தற்போது கேரள மாநில போலீசார் பாதுகாத்து வருகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அணையை பராமரிப்பதற்காக தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அங்கு அடிக்கடி செல்கிறார்கள். அவ்வாறு அணைக்கு செல்லும் அதிகாரிகளை தங்கள் பணியை செய்யவிடாமல் கேரள போலீசார் இடையூறு செய்கிறார்கள்.
இதையடுத்து அணையை பாதுகாக்கும் பணியில் மத்திய போலீசாரை ஈடுபடுத்த வேண்டும் என்று கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனு தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதி ஏ.கே. சிக்ரி அடங்கிய பெஞ்ச் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்குமாறு கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இது குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில்,
முல்லை பெரியாறு அணையை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய போலீஸாரிடம் அளிக்குமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது. அணை கேரளாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்கையில் மத்திய போலீசார் அணையை பாதுகாக்க அனுமதிக்க முடியாது என்றார்.