என் முன்னிலையில் ராணுவ வீரர்கள் தோண்டினால் புதையல் கன்பார்ம்: மீண்டும் ‘கனவு சாமியார்’
உன்னாவோ: என் கண் முனால் தோண்டாததால் தான் புதையல் கிடைக்கவில்லை என மீண்டும் பரபரப்பு பேட்டிக் கொடுத்துள்ளார் ‘கனவுச் சாமியார்' சோபன் சர்க்கார்.
உத்திரப்பிரதேசத்தில் சோபன் சர்க்கார் என்ற சாமியார் ஒருவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில் கோட்டை ஒன்றில் புதையல் தேடும் பணி நடைபெற்றது. ஆனால், எவ்வளவோ தேடியும் ஒருகிராம் தங்கம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் மீண்டும் தன் முன் தோண்டினால் நிச்சயம் புதையல் கிடைக்கும் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் சாமியார்.

வீரமரணம்...
ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டம் அமைந்துள்ள பகுதியில், குறுநில மன்னராக இருந்தவர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங். இவர் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு 1857-ம் ஆண்டு வீர மரணம் அடைந்தார்.

1000டன் தங்கப் புதையல்...
இவர் தாண்டியா கெராவில் உள்ள தனது கோட்டையில் 1,000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகவும், இத்தகவலை மன்னர் தன் கனவில் வந்து தெரிவித்ததாகவும் மத்திய அமைச்சர் சரண் தாஸ் மஹந்திடம் ஷோபன் சர்க்கார் என்ற துறவி கூறினார்.

தொல்பொருள் ஆய்வுத் துறையினர்...
இதன் அடிப்படையில், அக்கோட்டையை தோண்டி பார்க்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசின், தொல்பொருள் ஆய்வு துறையினர், கடந்த 18 ஆம் தேதி முதல் கோட்டையை தோண்ட துவங்கினர்.

எனக்கும் பங்கு...
யாரோ ஒருவர் கனவு கண்டு கூறியதை நம்பி மத்திய அரசு இவ்வாறு புதையல் தோண்டுவது கேலிக்குரியது என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்கள் எழுந்த போதும், புதையல் கிடைத்தால் எனக்கும் பங்கு என சிலர் டீலும் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றமே பரிசு....
இரண்டு வாரமாகியும் அங்கு உடைந்த வளையல்கள், இரும்பு துண்டுகள் கிடைத்ததே தவிர ஒரு கிராம் தங்கம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில், சிலநாட்களுக்கு முன்னர் ‘உன்னாவோ கோட்டையில் இத்தனை நாட்களும் அகழாய்வு செய்ததில், அங்கு தங்கப்புதையல் எதுவுமில்லை என தெரியவந்துள்ளதாக' தொல்பொருள் ஆய்வாளர்கள் அறிவித்தனர்.

என் முன்னிலையில்...
கோட்டைக்குள் தங்கம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று எல்லாரும் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மீண்டும் ‘கனவு சாமியார்' பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், , 'என்னை கோட்டைக்கு அழைக்க வேண்டும். என் முன்னிலையில் ராணுவ வீரர்களை வைத்து கோட்டைக்குள் பள்ளம் தோண்டினால்தான் தங்கம் கிடைக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications