ஜூலை 30-ல் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி யாகூப் மேமன் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு!
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். மகாராஷ்டிரா ஆளுநருக்குப் புதிய கருணை மனு அனுப்பியுள்ளதால் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் யாகூப் மேமன் வலியுறுத்தியுள்ளார்.
1992ஆம் ஆண்டு பாபர்மசூதி இடிப்பால் மும்பையில் பெரும் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி மும்பையை நாசமாக்கும் வகையில் 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
இந்தியாவில் நிகழ்த்தப்பட முதலாவது பயங்கரவாத தாக்குதல் இது. இதில் மொத்தம் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கரவாத செயலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் மற்றும் யாகூப் மேமன் கும்பலுக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது.
மும்பை தடா நீதிமன்றத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு யாகூப் மேமன் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியானது.
இதன் பின்னரும் கடைசி ஆயுதமாக திருத்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடியானதால் வரும் 30-ந் தேதி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.
ஆனால் உச்சநீதிமன்றம் திருத்த மனுவை நிராகரித்த உடனேயே மீண்டும் யாகூப் மேமன் சார்பில் மகாராஷ்டிரா ஆளுநருக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது முடிவெடுக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் வரும் 30-ந் தேதி யாகூப் மேமனை தூக்கிலிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மும்பை சிறைத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இந்த கருணை மனு நிராகரிப்பட்டால் யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிடும்.
உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமன் சார்பில் இன்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமது கருணை மனு மகாராஷ்டிரா ஆளுநர் முன்பாக நிலுவையில் இருக்கிறது. ஆகையால் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.