அமித்ஷா மகனின் முறைகேடு... ஊழலைப் பற்றி பேசும் தகுதியை இழந்தது பாஜக: யஷ்வந்த் சின்ஹா பொளேர்
ஊழலைப் பற்றி பேசும் தகுதியை இழந்துவிட்டது பாஜக என சாடியுள்ளார் யஷ்வந்த் சின்ஹா.
டெல்லி: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மகன் ஜெய் ஷா நிறுவன முறைகேடுகள் அம்பலமான நிலையில் ஊழலைப் பற்றி பேசும் தகுதியை பாஜக இழந்துவிட்டது என அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஓரம்கட்டப்பட்டிருந்தார் அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. திடீரென பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை கடுமையாக விமர்சித்து வருகிறார் யஷ்வந்த் சின்ஹா. இவரது விமர்சனத்தால் பாஜகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் முறைகேடுகள் அம்பலமானது. இதை முன்வைத்து பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
யஷ்வந்த் பாய்ச்சல்
தற்போது யஷ்வந்த் சின்ஹாவும் பாஜகவை விளாசத் தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக யஷ்வந்த் சின்ஹா கூறியதாவது: அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவின் முறைகேடு அம்பலமான நிலையில் ஊழலைப் பற்றி பேசும் அருகதை பாஜகவுக்கு இல்லை.
ஜெய்ஷாவுக்கு உடந்தை யார்?
அமித்ஷா மகன் நிறுவனத்தின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அரசு துறைகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமித்ஷா மகன் ஜெய்ஷாவுக்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா ஆஜராகி இருக்கிறார்.
முன் எப்போதும் நடக்காதது
ஒரு தனி நபருக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராவது என்பது இதற்கு முன்னர் நடக்காத ஒரு நிகழ்வாகும். அமித்ஷா மகனுக்கு மின்துறை அமைச்சகம் கடன் கொடுத்திருக்கிறது.
பியூஷ் ஆதரவால் சர்ச்சை
இந்நிலையில் ஜெய்ஷாவுக்கு ஆதரவாக அமைச்சர் பியூஷ் கோயல் பேசியிருப்பது ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.