தமிழர்கள் கடும் உழைப்பாளிகள், நேர்மையானவர்கள்.... எடியூரப்பா புகழாரம்
ஷிமோகா: திருக்குறளில் உள்ள நல்ல கருத்துக்களை வட இந்திய மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம், ஷிமோகா, ஜே.எச்.படேல் நகரில் தமிழ்ச்சங்கம் சார்பில் ரூ.3 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையும், சமுதாய நலக்கூடமும் கட்டப்பட்டுள்ளது. இதை கர்நாடக மேலவை பாஜக எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா சிலையைத் திறந்து வைத்தார். விழாவை எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசுகையில், பெங்களூருவில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 18 ஆண்டுகளாக மூடியிருந்த திருவள்ளுவர் சிலையை நான் முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தேன். எனக்கு முன்பு பல முதல்வர்கள் இருந்தபோதும், அவர்கள் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தால் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில் திறக்காமல் இருந்தனர். ஆனால் எனக்கு அந்த பயம் கிடையாது.
இதேபோல, தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த சர்வக்ஞர் சிலையை அப்போதைய தமிழக முதல்வசர் கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அந்த சிலையை திறந்து வைத்தேன். இதன்மூலம் கன்னட-தமிழக மக்களின் உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
அதன்பிறகு கர்நாடகத்திற்கு வேலை தேடி வரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கர்நாடகத்திலும் தமிழ் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள் - நேர்மையானவர்கள்.
பதவி வரும், போகும். ஆனால் மனித நேயமும், உண்மையான உறவும் தான் கடைசி வரை நிலைத்து நிற்கும். பதவியில் இருப்பவர்கள் அனைத்து மக்களுக்கும் நடுநிலையாக செயல்பட்டு ஆட்சி நடத்தவேண்டும். அது தான் உண்மையான நல்லாட்சி ஆகும்.
திருவள்ளுவரின் புகழையும், திருக்குறளில் உள்ள நல்ல கருத்துகளையும் வட இந்திய மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் திருவள்ளுவர் தினத்தை கொண்டாட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி உத்தரவிட்டுள்ளார் என்றார்.