யோகா எதிர்ப்பாளர்கள் பாகிஸ்தான் சென்றுவிட வேண்டும்.. புது சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிராச்சி..
டெல்லி : அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி தற்போது மேலும் ஒரு அதிரடி கருத்தைத் தெரிவித்து ஊடகங்களுக்கு தீனி போட்டுள்ளார்.
யோகாசனத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடலாம் என்றும் அவர் கூறியுள்ளது டெல்லி வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிக்கு துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாத்வி, அழைப்பிதழ் அனுப்பிதான் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்கு டெல்லி ராஜபாதையில் நடைபெற்றது அரசியல்வாதி தலைவர்களின் மகளின் திருமண நிகழ்ச்சி அல்ல என்றார்.
இணைப்பு பாலமாக செயல்படும் யோகாசனம் என்பது ஒரு தனிப்பட்ட மத நம்பிக்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியாவின் பாரம்பரியங்களுக்கும், கலாசாரங்களுக்கும் ஆட்சேபனை தெரிவிப்பது ஒருபோதும் ஜனநாயகம் ஆகாது என்றும் சாத்வி கூறினார். இந்த நாட்டின் நலனுக்காக அவர் (ஹமீது அன்சாரி) எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதை நானும் பல நாட்களாக பார்த்து வருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லி யோகா விழா தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தொடர்பாக பேசிய சாத்வி பிராச்சி, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் அவர்களாகவே தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து ஆட்சேபம் தெரிவிக்க கூடாது என்று தெரிவித்தார். அப்படி ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் இந்தியாவுக்குள் வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள் என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்கு போய் விடலாம் எனவும் சாத்வி பிராச்சி கூறினார்.












Click it and Unblock the Notifications