பிக் சேஞ்ச்.. அசரடிக்கும் அரசு பள்ளிகள்.. கல்வித்துறைக்கு கூடுதல் நிதி.. உ.பி அரசின் புதிய யோசனை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கல்வி தரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் PM SHRI திட்டத்தின் மாநிலம் முழுவதும் 1,753 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக யோகி பதவியேற்கும்போது இம்மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவேன் என்று கூறியிருந்தார். இதனை சாத்தியப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்படி அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதில் முக்கியமானது உலக முதலீட்டாளர்கள் மாநாடு. வழக்கமாக இந்த மாநாடு உத்தரப் பிரதேசம் தவிர்த்து மும்பை, டெல்லி போன்ற இடங்களில் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் முதல் முறையாக இந்த மாநாட்டை லக்னோவில் யோகி ஆதித்யநாத் நடத்தினார். இந்த மாநாட்டின் மூலம் ரூ.35 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் இம்மாநிலத்திற்கு வர இருக்கிறது. அதேபோல புதிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வருவதற்கு ஏற்ப மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த யோகி திட்டமிட்டார்.
இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முக்கிய துறைகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கல்வி துறைதான். பள்ளி கல்வி துறைக்கு மட்டும் சுமார் ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு அடுத்த மூன்று மாதங்களில் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும். அதேபோல மாநிலத்தில் உள்ள 1753 பள்ளிகள் PM SHRI திட்டத்தின் மேம்படுத்தப்பட இருக்கின்றன. கூடுதல் கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், கழிவறைகள் என பல்வேறு புதிய கட்டுமானங்களுக்கு இந்த திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஏற்கனவே இந்த திட்டத்திற்கு ரூ.1010 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதாவது முதல் கட்டமாக ரூ.500 கோடியும் இரண்டாவது கட்டமாக ரூ.510 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும். கொரோனா தொற்று காலத்திற்கு பின் பள்ளிகளில் மாணவர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இடைநிற்றல் அதிகரித்துள்ளது. எனவே இதனை சரி செய்யும் நோக்கிலும் அதிகாரிகளை தீவிரமாக களத்தில் இறக்கியுள்ளது மாநில அரசு. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பை நடத்தி பள்ளிக்கு சென்ற மாணவர்கள் எத்தனை பேர்? இடை நின்றவர்கள் எத்தனை பேர்? பள்ளிக்கே போகாமல் இருப்பவர்கள் எத்தனை பேர்? என்று ஆய்வு செய்து புள்ளிவிவரங்களை தயாரிப்பார்கள்.
இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் மாநில அரசு எந்த பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யும். உத்தரப் பிரதேசத்தில் அரசு பள்ளி மாணவர்களின் எழுத்தறிவு மோசமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்தன. எனவே இதனை மாற்றவும் மாநில அரசு திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications