நீங்க ஒரு பெண்.. உங்களுக்கு எதுவும் தெரியாது.. எம்எல்ஏவிடம் நிதிஷ் குமார் ஆவேசம்.. பீகாரில் சர்ச்சை
பாட்னா: பீகார் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் பெண் எம்.எல்.ஏவை பார்த்து... "நீங்கள் பெண், உங்களுக்கு எதுவும் தெரியாது... உட்காருங்கள்' என முதல்வர் நிதிஷ் குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் எம்.எல்.ஏவை மரியாதைக்குறைவாக பேசியதாக நிதிஷ் குமாருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பீகாரில் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் ஆட்சி நடத்தி வருகிறார். காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவி வகித்து வந்த நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனால், நிதிஷ் கூட்டணியில் இருந்த லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்கின்றன. தற்போது அங்கு சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் நிதிஷ் குமாருக்கு கிடுக்குப்பிடி கேள்விகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து அவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இட ஒதுக்கீடு விவகாரம், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து ஆகிய விவகாரங்களில் நிதிஷ்குமார் தோல்வி அடைந்து விட்டதாக கூறிய காங்கிரஸ், ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். இடஒதுக்கீட்டை 65 சதவிகிதமாக உயர்த்திய நிதிஷ் குமார் அரசின் முடிவை ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இது தொடர்பாக அவையில் பேசிய நிதிஷ் குமார் பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய சில நடவடிக்கைகள் எடுத்து இருப்பதாகவும் நிதிஷ் பதிலளித்தார். ஆனாலும் நிதிஷ்குமாரின் பதிலால் திருப்தி அடையாத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. அப்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் பெண் எம்.எல்.ஏ ரேகா பாஸ்வான் இவ்விவகாரத்தில் நிதிஷ் குமாரை பார்த்து கேள்வி எழுப்பினார்.
இதனால் டென்ஷன் ஆன நிதிஷ் குமார், 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு, எனது அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் காரணமாகவே இன்று உங்களால் இவ்வளவு பேச முடிகிறது. அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து இடஒதுக்கீடு வேலையை செய்தோம். நீங்கள் ஒரு பெண்.. உங்களுக்கு எதுவும் தெரியாது. உட்கார்ந்து கேளுங்கள்.
நான் அதிகாரத்திற்கு வந்த பிறகுதான் பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைத்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?" என்று நிதிஷ் குமார் கூறினார். நிதிஷ் குமாரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. நிதிஷ்குமாரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பீகார் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் தணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரின் பேச்சு தரம் தாழ்ந்தது.
இதுபோன்று பேசுவது நிதிஷ் குமாருக்கு வாடிக்கையாகிவிட்டது. இது மிகவும் தீவிரமான மற்றும் கவலைக்குரிய விஷயமாகும். சில நாட்களுக்கு முன்னால் பாஜகவை சேர்ந்த பழங்குடியின பெண் எம்.எல்.ஏவின் அழகு பற்றி இழிவான முறையில் பேசினார். தற்போது ஒரு தலித் பெண் எம்.எல்.ஏ குறித்து தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்" என்றார். நிதிஷ் குமாரின் கருத்துக்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications