டெல்லி போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய பஞ்சாப் இளம் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
அமிர்தசரஸ்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் தொடர் போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய பஞ்சாப் இளம் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 25 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டே வருகிறது.

போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் இந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. விவசாயிகளைப் பொறுத்தவரையில் புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி போராட்டட்தில் பங்கேற்ற விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஹரியானாவை சேர்ந்த சீக்கிய மதகுரு ஒருவர் டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடம் அருகே துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே டெல்லி போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு பஞ்சாப் திரும்பிய குர்லாப்சிங் என்ற 22 வயது விவசாயி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் தயாள்புரா மிர்சா கிராமத்தில்தான் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications