ஃபெட்னா 2017: தமிழ்ப்பேரவை விழா... பாராலிம்பிக் தங்கமகன் மாரியப்பன் பங்கேற்பு
பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற தமிழர் மாரியப்பன் தங்கவேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற தமிழர் மாரியப்பன் தங்கவேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தனது விளையாட்டு அனுபவங்களை தமிழர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
மாரியப்பன் தங்கவேலு, மாற்றுத்திறனாளித் தடகள விளையாட்டு வீரர் ஆவார். தமிழ்நாட்டு விளையாட்டு வீரரான இவர் உயரந்தாண்டுதற் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார். இரியோ டி செனீரோவில் நடந்த 2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் பெற்று நாட்டுகே பெருமை சேர்த்தவர்.

மாரியப்பன் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர். தனது ஐந்தாவது அகவையில் பள்ளி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் பேருந்து வலது காலில் ஏறி முழங்காலுக்குக் கீழே, காலை இழந்தார்.
இவரது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன் பரிந்துரைப்படி இவர் உயரம் தாண்டுவதில் பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது 14ஆவது வயதில் நற்தேகம் உடையவர்களும் கலந்துகொண்ட போட்டியில் 2வதாக வந்தார்.
2013 தேசிய மாற்றுத்திறனாளர் போட்டிகளில் கலந்து கொண்ட மாரியப்பனை கண்ட பயிற்றுநர் சத்தியநாராயணா தமது பயிற்சிக்கு ஏற்றுக் கொண்டார். 2015இல் பெங்களூருவில் அவரது பயிற்சி மையத்தில் இணைந்தார்.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தூனிசியாவில் நடந்த ஐபிசி கிராண் பிரீ போட்டியில் 1.78 மீ தாண்டி இரியோ மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றார். தங்கம் வென்ற இவருக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தனக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகைகளிலிருந்து, தான் படித்த அரசு பள்ளிக்கூடத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். தன்னம்பிக்கையும் நேர்கொண்ட பார்வையுமிருந்தால், சமூகத்துக்கே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கலாமென்பதற்கு இவர் ஓர் இலக்கணம்.
தமிழுக்கு பெருமை சேர்த்த இந்த வாகைசூடிக்கு வரவேற்பு அளிப்பதில் மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் பெருமை கொள்கிறது.












Click it and Unblock the Notifications