வங்கதேசத்தில் இருந்து மலேசியா நோக்கி சென்ற ரோஹிங்கியா அகதிகள் படகு நடுக்கடலில் மூழ்கியது-15 பேர் பலி
டாக்கா: வங்கதேசத்தில் இருந்து மலேசியா நோக்கி சென்ற ரோஹிங்கியா அகதிகள் படகு நடுக்கடலில் மூழ்கியதில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மியான்மர் இனப்படுகொலையில் இருந்து தப்பிய ரோஹிங்கியாக்கள் வங்கதேசம் அகதிகள் முகாமில் தங்கி இருந்தனர். அங்கிருந்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 130 பேர் மலேசியாவுக்கு படகு மூலம் அகதிகளாக செல்ல முயன்றனர்.

வங்காள விரிகுடாவை இவர்கள் கடக்க முயன்ற போது படகு நடுக்கடலில் மூழ்கியது. இது தொடர்பாக வங்கதேச கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்விபத்தில் 15 ரோஹிங்கியாக்கள் பலியாகினர். 73 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன அகதிகளை தேடும் பணி நடைபெறுவதாக வங்கதேச கடற்படை செய்தித் தொடர்பாளர் ஹமிதுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications