சிரியாவில் கண்மூடித்தனமான தாக்குதல்.. 18 பேர் பலி.. 50க்கும் மேற்பட்டோர் மாயம்.. ஐஎஸ் மீது சந்தேகம்
டமாஸ்கஸ்: சிரியாவில் பாலைவனபகுதியில் காளான் பறிக்க சென்ற மக்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் பலியானதாகவும் 50 க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாகவும் மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் நடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. ஐ.எஸ் பயங்கர அமைப்புக்கும் அரசு ஆதரவு படைகளுக்கும் அடிக்கடி நடைபெறும் மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் அந்த நாட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சிரியாவில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையில் அங்குள்ள பாலைவன பகுதிகளில் அரிய காளான்கள் வளர்கின்றன. இந்த காளான்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருப்பதால் உயிரை பணையம் வைத்து பலரும் ஐஎஸ் பயங்கரவாதிகளின் மறைவிடம் அமைந்து இருக்கும் அப்பகுதிக்கு சென்று காளான்களை பறிக்கிறார்கள். அரசு எச்சரிக்கையும் மீறி மக்கள் அதிகம் செல்கிறார்கள்.
இந்த நிலையில், பாலைவனப்பகுதிக்கு சென்ற மக்கள் மீது துப்பாக்கி ஏந்திய நபர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேர் மாயமாகி இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள அரசு ஆதரவு தொலைக்காட்சி 47 பேர் பலியானதாக கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனினும், ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் கடந்த காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது இல்லை என்று மறுத்துள்ளது. சிரியாவின் மேற்கில் தொடங்கி கிழக்கு பகுதி வரை ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த இடமாக உள்ளது. இந்த பகுதியில் 34 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஐ.எஸ் பயங்கராவதிகள் ஒரு கட்டத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். சிரியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும், ஐஎஸ் அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளால் அச்சுறுத்தல் அதிக அளவில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications