பப்புவா நியூ கினியா நிலச்சரிவு... மண்ணில் உயிரோடு புதையுண்ட 2,000 பேர்.. அதிர்ச்சி தகவல்!
போர்ட் மோர்ஸ்பி: பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் அதிகமானோர் உயிரோடு மண்ணில் புதையுண்டு போனதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆஸ்திரேலியா அருகே உள்ளது பப்புவா நியூகினியா நாடு. இந்த நாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை முதலில் 100 ஆக இருந்தது. பின்னர்தான் நிலச்சரிவின் கோர முகமே வெளியே தெரிய தொடங்கியது. பப்புவா நியூகினியாவில் 670 பேர் மண்ணில் புதையுண்டு போனதாக ஐநா அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தற்போது இந்த நிலச்சரிவில் சுமார் 2,000க்கும் அதிகமானோர் உயிரோடு மண்ணில் புதையுண்டு போயிருக்கக் கூடும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மண்ணில் புதையுண்டு போன 2,000 பேரை மீட்க முடியுமா? என்பது தெரியாமல் அந்த நாடு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. உறவுகளின் உடல்களையாவது தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பொதுமக்களே களமிறங்கி இருக்கின்றனர்.
மேலும் சில இடங்களில் 30 அடி ஆழத்துக்கு இடிபாடுகள் குவிந்து கிடக்கின்றன. இந்த இடங்களில் மீட்புப் பணியை மேற்கொள்ள முடியாமல் செய்வதறியாது மீட்பு குழுவினர் தவிக்கின்றனர். தற்போதைய நிலையில் பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையை உறுதியாக சொல்ல முடியாத நிலைமை இருக்கிறது என்கின்றனர் மீட்பு குழுவினர்.
பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணம்தான் மிக மோசமான பேரழிவைச் சந்தித்துள்ளது. இத்தனை ஆயிரம் பேரை தேடுவதற்கு போதுமான மீட்பு கருவிகள் இல்லை என்பது இன்னொரு துயரம். இந்த மீட்பு கருவிகள் வந்த பின்னரே மண்ணில் புதையுண்ட ஆயிரக்கணக்கானோரை தேடும் பணியே தொடங்கப்படும் எனவும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.
அதேநேரத்தில் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை தொடருவதாகவும் அந்த ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications