ஆப்கானில் இருந்து 2,000 செய்தியாளர்கள் வெளியேற விருப்பம்- தாலிபான்களுடன் சர்வதேச அமைப்பு பேச்சு!
காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து 2,000 செய்தியாளர்கள் வெளியேற விரும்புவதாகவும் அத்தனை பேரையும் பாதுகாப்பாக மீட்பது குறித்து தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தாலிபான்கள் 2.0 பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியது முதலே பெரும்பாலான வெளிநாட்டவர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இதுவரை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றியவர்களும் ஆப்கானை விட்டு வெளியேறி பல நாடுகளில் தஞ்சமடைந்துவிட்டனர்.
ஆப்கான் பொதுமக்களும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து தப்பி வருகின்றனர். பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக வெளியேற குவிந்து வருகின்றனர்.

வெளியேற விரும்பும் 2000 பேர்
இந்நிலையில் தாலிபான்கள், பத்திரிகையாளர்கள் சிலரை கொடூரமாக தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் ஆப்கானில் ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனவும் கூறப்பட்டது. இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தம் 2,000 பத்திரிகையாளர்கள் வெளியேற விரும்புகிறார்கள் என்று சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

தாலிபான்களுடன் பேச்சு
இது தொடர்பாக ஆப்கான் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் துணை செயலாளர் ஜெனரல் ஜெரிமி டியர் கூறுகையில், ஏற்கனவே ஆப்கான் செய்தியாளர்களிடம் இருந்து வெளியேற விரும்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது தொடர்பாக சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு பல்வேறு நாடுகளை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆப்கானில் இருந்து பத்திரிகையாளர்களை பாதுகாக்க தாலிபான்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

உலக நாடுகள் தயக்கம்
பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்க ஸ்பெயின், வடக்கு மாசிடோனியா, பிரான்ஸ், மெக்சிகோ, இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒருநாடுமே 10 அல்லது 15-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்கவும் அகதிகளாக அடைக்கலம் தரவும் தயாராக இல்லை. விசா வைத்திருக்கும் பத்திரிகையாளர்களை காபூலை விட்டு வெளியேறவும் தாலிபான்கள் அனுமதிக்கவில்லை.

தடுக்கும் தாலிபான்கள்
சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு ஆப்கான் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக வெளியேற தாலிபான்கள் ஒத்துழைப்புதான் இப்போதைய தேவை. ஆப்கானிஸ்தானுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பத்திரிகையாளர்கள் உயிர் அச்சத்துடனே ஆப்கானில் வாழ்ந்து வருகின்றனர். விரைவில் ஆப்கான் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக வெளியேறுவார்கள் என்றார்.

உலாமா தலைவர் கைது
இதனிடையே ஆப்கானிஸ்தானின் உலாமா கவுன்சில் தலைவரான மவுலானா முகமது சர்தார் ஜத்ரானை தாலிபான்கள் கைது செய்துள்ளனர். தென்கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் தாலிபான்களால் மவுலானா கைது செய்யப்பட்டார். அவரது கண்கள் கட்டப்பட்ட நிலையில் தாலிபான்கள் பிடியில் இருக்கும் படங்களை ஆப்கான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications