35 ஆண்டுகளாக வயிற்றில் கல் குழந்தையுடன் 73 வயது மூதாட்டி.. லித்தோபீடியன் என்றால் என்ன?
அல்ஜியர்ஸ்: அல்ஜீரியா நாட்டில் 73 வயது மூதாட்டி ஒருவர் 35 ஆண்டுகளாக வயிற்றில் சுமந்து வந்த கல் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
அல்ஜீரியாவின் ஸ்கிக்டாவை சேர்ந்தவர் 73 வயது மூதாட்டி. இவருக்கு வயிற்று வலி காரணமாக மருத்துவரை சந்தித்தார். அப்போது அவருக்கு வயிற்றில் எக்ஸ் ரே ஸ்கேன் எடுக்கப்பட்டது.
இதில் அவரது வயிற்றில் கல் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வயிற்றில் சுமார் 3 கிலோ எடை கொண்ட 7 மாதங்களான கல் குழந்தை கடந்த 35 ஆண்டுகளாக இருப்பது கண்டறியப்பட்டது.

கருப்பை
இதற்கு பெயர் லித்தோபீடியன் என்பார்கள். அதாவது கரு கருப்பையில் வளராமல் அடிவயிற்றில் வளருவதற்கு பெயர் லித்தோபீடியன் ஆகும். அடிவயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ரத்த ஓட்டம் செல்லாமல் இருக்கும். இதனால் அந்த கரு வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகிறது.

கால்சியம் உப்பு
உடலில் வேறு ஒரு பொருள் இருப்பதை நோய் எதிர்ப்பு சக்தி புரிந்து கொள்கிறது. இதை வெளியேற்றவும் முயற்சிக்கிறது. ஆனால் உடலில் இருந்து வெளியாகும் கால்சியம் உப்புகள் சேர்ந்து அந்தக் குழந்தையை கல்லாகிவிடுகிறது. இதனால் அந்த குழந்தையை வெளியேற்ற முடியாமல் போகிறது. இத்தனை ஆண்டுகளாக அந்தப் பெண்ணுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை.

வயிற்றில் கல் குழந்தை
அண்மையில் அவருக்கு உடல்நல பரிசோதனையும் செய்யப்பட்டது. அப்போது கூட அவரது வயிற்றில் இருந்த கல் குழந்தை குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து வயிற்றில் எக்ஸ்ரே ஸ்கேன் செய்த போதுதான் இது கண்டுபிடிக்கப்பட்டது.

82 வயதில் இறப்பு
இது போல் அதிகாரப்பூர்வமாக 290 பேருக்கு கல் குழந்தை வளர்ந்துள்ளது. முதல் முறையாக 1582 ஆம் ஆண்டில் இது போல் ஒரு பெண்ணின் வயிற்றில் கல் குழந்தை வளர்ந்துள்ளது. அந்த பெண் 82 வயதில் இறந்துள்ளார். அவர் இறந்த பிறகு அவரது பிரேத பரிசோதனை முடிவில் கல் குழந்தை குறித்து தகவல்கள் வெளியாகின. அது போல் அண்மையில் 2013 ஆம் ஆண்டு கொலம்பியாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 40 ஆண்டுகாலமாக அவரது அடிவயிற்றில் கல் குழந்தை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தை அகற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications