சிம்ம சொப்பனமாக இருக்கும் 5 விஷயம்.. இதுமட்டும் சுமூகமாக முடிந்தால்.. ஈரான் அமைதி பூமியாக மாறிவிடும்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நாளை தொடங்கவுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையே 5 முக்கிய விஷயங்கள் தான் இந்த போருக்கு பெரும் தடையாக உள்ளது.
பாகிஸ்தானில் நாளை நடக்க உள்ள பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டுமானால், இந்த 5 பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

ஈரானின் அணு ஆயுத திட்டம்
அமெரிக்கா ஈரானின் அணு ஆயுத திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் ஈரான், அணு ஆயுத திட்டத்தின் மீது விதிக்கப்படும் எந்த கட்டுப்பாடுகளாக இருந்தாலும் சில வருடங்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த வேறுபாடு இரு தரப்புக்கும் இடையே மிகப்பெரிய தடையாக உள்ளது. அணு ஆயுத திட்டம் என்பது ஈரானுக்கு தனது பாதுகாப்பு மற்றும் எனர்ஜி தேவைகளுடன் தொடர்புடையது என்பதால், முழுமையான நிறுத்தம் என்ற கோரிக்கையை ஈரான் ஏற்க மறுக்கிறது.
ஈரானின் யுரேனியம் கையிருப்பு
டொனால்டு டிரம்ப், ஈரான் வைத்திருக்கும் 400 கிலோவுக்கும் அதிகமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் ஈரான் இந்த கோரிக்கையை முழுமையாக நிராகரித்துள்ளது. இந்த யுரேனியம் ஈரானின் அணு திட்டத்தின் முக்கிய பகுதியாக இருப்பதால், இந்த விஷயமும் பேச்சுவார்த்தையின் முக்கிய தடையாக மாறியுள்ளது.
இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென்றால் ரஷ்யா உதவுவதாக அறிவித்துள்ளது. அதாவது ஈரான் கையில் இருக்கும் 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரஷ்யா வாங்கிக்கொள்ள தயார் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் நீரிணை கட்டுப்பாடு
ஈரான், அமெரிக்கா தனது துறைமுகங்களுக்கு விதித்த கடற்படைத் தடையை முழுமையாக நீக்கினால் மட்டுமே ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்தும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால் டிரம்ப், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை தடை தொடரும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய வழியான ஹார்முஸ் நீரிணை இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுவதால், இது பேச்சுவார்த்தையின் மிக முக்கிய தடையாக உள்ளது. சொல்லப்போனால் இந்த தடையை நீக்கி அமெரிக்க கடற்படை வெளியேறினால் மட்டுமே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருவதாக அறிவித்தது. ஆனால் இரு நாடுகளுக்கு மத்தியிலான மீடியேட்டர் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி ஈரானை பாகிஸ்தானுக்கு அழைத்துள்ளது.
Frozen சொத்துக்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள்
ஈரான் அதிகாரிகள், இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், உலக நாடுகளும் ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், உலக நாடுகளில் முடக்கப்பட்டு உள்ள 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஈரான் சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இது ஈரானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர். அமெரிக்கா இந்த கோரிக்கையைகளை ஏற்க முன்வருமா என்பது இன்னும் தெளிவாக இல்லை.
போர் இழப்பீடு
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு 270 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோருகிறது. இந்த கோரிக்கை அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த பிரச்சினை பேச்சுவார்த்தையின் மற்றொரு முக்கிய தடையாக மாறியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், மத்திய கிழக்கில் அமைதி நிலைக்க வாய்ப்பு உருவாகும். இதனால் எண்ணெய் விலை உயர்வு, விமான போக்குவரத்து சிக்கல்கள் போன்றவை குறையும். ஆனால் தற்போதைய தடைகள் தொடர்ந்தால், போர் மீண்டும் தீவிரமடையும் அபாயம் உள்ளது.
இந்த 5 முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டால் தான், அமெரிக்கா-ஈரான் இடையே நீண்டகால அமைதி சாத்தியமாகும். இள்லையெனில் தொடர்ந்து பிரச்சனைகள் வெடிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் தான் பல வாரங்களுக்கு பின்பு கத்தார் தனது விமான நிலையத்தை வெளிநாட்டு விமானங்கள் பயன்படுத்த நேற்று திறந்தது. இந்த முடிவை பார்க்கும் போது போர் நிறுத்தும் மீண்டும் நீட்டிக்கப்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.















Click it and Unblock the Notifications