ஈராக்கில் குண்டுகள் நிரப்பிய டிரக்கை வெடிக்கச் செய்த ஐஎஸ் தீவிரவாதி: 51 பேர் பலி, 70 பேர் காயம்
பாக்தாத்: ஈராக்கின் பாபில் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 51 பேர் பலியாகியுள்ளனர், 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஈராக்கின் பாபில் மாகாணத்தில் இருக்கும் ஹில்லா நகரின் அல் அதார் பாதுகாப்பு சோதனைச் சாவடிக்கு ஞாயிற்றுக்கிழமை டிரக் ஒன்று வந்தது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த டிரக்கை நிறுத்தியபோது அதில் இருந்த நபர் தனது உடல் மற்றும் வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இதில் காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 23 பேர் பலியாகினர். மேலும் சோதனைச்சாவடியில் வரிசையாக காரில் காத்திருந்த பொது மக்கள் 28 பேர் பலியாகினர். சோதனைச்சாவடி பகுதியில் இருந்த 70 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் அந்த சோதனைச் சாவடியில் நின்று கொண்டிருந்த பல கார்கள் எரிந்து நாசமாகின. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 28ம் தேதி சதர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 78 பேர் பலியாகினர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் சோதனைச்சாவடிகள், மார்க்கெட்டுகள், காபி கடைகள், மசூதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications