ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற அகதிகள்.. திடீரென படகு கவிழ்ந்து மோசமான விபத்து... 52 பேர் உயிரிழப்பு?
மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் அட்லாண்டிக் கடலில் ஹனரி தீவுகள் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து ஏற்பட்டுள்ள விபத்தில் 52 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பல இயற்கை வளங்களைக் கொண்டிருந்தாலும் மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.
இதனால் அங்கிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் வேறுவழியின்றி ஆண்டுதோறும் ஐரோப்பிய நாடுகளில் சட்ட விரோதமாக அகதிகளாக நுழைய முயல்கின்றனர்.

ஆபத்தான பயணங்கள்
இதற்காக மிக மிக ஆபத்தான முறையில் கப்பல் பயணங்களையும் அவர்கள் மேற்கொள்கின்றனர். எப்படியாவது ஐரோப்பிய நாடுகளில் எதாவது ஒன்றுக்கு வந்தால் போதும் என்று இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். கடலில் நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொள்ளாமலும், ஒரே கப்பலில் அதிக நபர்களை ஏற்றி வருவதாலும் அகதிகளை ஏற்றி வரும் படகுகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. 2021ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் இப்படி ஆபத்தான முறையில் பயணிப்பவர்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

கப்பல் விபத்து
அப்படியொரு விபத்து தான் இப்போது ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் ஐவரிகோஸ்ட் நாட்டில் இருந்து கடந்த வாரம் அகதிகளை ஏற்றுக் கொண்டு ஸ்பெயின் நாட்டை நோக்கி கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தக் கப்பல் ஸ்பெயினின் ஹனரி தீவுகளுக்கு 220 கிலோமீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஏற்பட்டுப் பல மணி நேரம் கழித்து அந்த வழியில் சென்ற சரக்கு கப்பல் ஒன்று ஸ்பெயின் கடற்படையினருக்கு இந்த விபத்து பற்றி தகவல் கொடுத்தது.

எத்தனை பேர்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்பெயின் கடற்படையினர், அங்கு படகின் பாகங்களைப் பிடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை மட்டும் மீட்டனர். கப்பலில் மொத்தம் 53 பேர் வரை பயணித்தாக ஸ்பெயின் கடற்படை தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் மற்றவர்கள் யாரும் இல்லை என்பதால், அவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாயமானவர்களைத் தேடும் பணிகளை ஸ்பெயின் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

எப்படி ஏற்பட்டது
இந்த மோசமான விபத்து எப்படி ஏற்பட்டது என இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு மிக மோசமான வானிலை நிலவி வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகப் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது வரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஒரு பெண் மட்டும் மீட்பு
உயிருடன் மீட்கப்பட்ட அந்த பெண், மருத்துவச் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்பெயின் நாட்டிலுள்ள லாஸ் பால்மாஸ் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்துப் பெயர் வெளியிட விரும்பாத மீட்புப் படை வீரர் ஒருவர் கூறுகையில், "அந்தப் பெண் படகின் பாகங்களைப் பிடித்துக் கொண்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே உயிரிழந்த நிலையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது. இது மிகவும் மோசமான ஒரு விபத்து என்பதால் படகில் பயணித்தவர்கள் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications