சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்: கடலில் குளித்தவர்களை ‘பிரானா’ கடித்ததில் 60 பேர் காயம்
பியூனஸ் அயர்ஸ்: கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகக் கடலில் குளிக்கச் சென்ற மக்களை பிரானா என்ற வகை மீன் கடித்துள்ளது. இதில் சுமார் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தக் கோரத் தாக்குதலில் சிக்கி பல குழந்தைகள் விரல்களை இழந்துள்ளனர்.
பிரானா என்ற மீன்களின் அட்டகாசத்தை படங்களில் பார்த்தபோதே அவ்வளவு திகிலாக இருந்தது. ஆனால், அவற்றின் கொடூர முகத்தை நேரில் கண்டு அரண்டு போயிருக்கிறார்கள் அர்ஜெண்டினா நாட்டினர்.
அதிலும், கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாட சென்றவர்கள் பிரானா மீனின் தாக்குதலில் சிக்கி படுகாயனடைந்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...
அர்ஜெண்டினா நாட்டில் உள்ள ரோசாரியோ நகரைச் சேர்ந்தவர்கள் அருகிலிருந்த கடற்கரையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அங்கிருந்த கடலில் இறங்கி ஆனந்தக் குளியலிட்டுள்ளனர்.

திடீர்த் தாக்குதல்...
அப்போது, அங்குக் குளித்துக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்க்காத தருணத்தில் கடலுக்கு உள்ளே இருந்து பிரானா எனப்படும் மனிதர்களைக் கடிக்கும் மீன்கள் வெளிவந்து தாக்கியுள்ளன.

அலறித் துடித்த மக்கள்...
என்ன நடக்கிறது என அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள், குழந்தைகள் உட்பட அப்பகுதியில் குளித்தவர்களின் உடலைக் கடிக்கத் துவங்கியுள்ளன பிரானாக்கள். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அம்மக்கள் அலறித்துடித்து கடலிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளனர்.

குழந்தைகள்...
இந்தக் கொடூர தாக்குதலில் சிக்கி சுமார் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் பல குழந்தைகள் தங்கள் விரல்களை முழுவதுமாக பறி கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறம் மாறிய கடல்...
மேலும், கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட பிரானாக்களின் தாக்குதலால் அப்பகுதி கடல் நீர் சிவப்பு நிறமாகக் காட்சியளித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications