சிரியாவில் ஷியா தர்கா அருகே ஐஎஸ் தற்கொலைப்படை தாக்குதல்: 71 பேர் பலி
டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள ஷியா தர்கா அருகே ஐஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் 71 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர்.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ளது சய்யிதா ஜெயினப் தர்கா. ஞாயிற்றுக்கிழமை அந்த தர்காவுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது ஒரு காரில் இரண்டு ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப்படை தீவிரவாதிகள் அங்கு வந்தனர்.
அதில் ஒருவர் காரை விட்டு கீழே இறங்கி வந்து மக்களுடன் மக்களாக நின்றார். தர்கா அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் காரில் இருந்த தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதையடுத்து மக்களுடன் மக்களாக நின்றிருந்த தீவிரவாதியும் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அடுத்தடுத்து நடந்த இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில் 5 குழந்தைகள் உள்பட 71 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல்களில் தர்கா அருகே இருந்த ஆறு மாடி கட்டிடம் சேதம் அடைந்தது. சய்யிதா ஜெயினப் தர்காவில் நபிகள் நயாகத்தின் பேத்திகளில் ஒருவரின் சமாதி உள்ளது. இதை ஷியா பிரிவு முஸ்லீம்கள் புனித தலமாக கருதுகிறார்கள். இந்த தர்காவுக்கு சிரியா தவிர்த்து ஈரான், லெபனான் மற்றும் ஈராக்கில் இருந்து ஏராளமான ஷியா முஸ்லீம்கள் வருவது வழக்கம்.
முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தர்கா அருகே நடந்த இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில் 4 பேர் பலியாகினர், 13 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.