புல்வாமா பாணியில் பயங்கரம்.. பாகிஸ்தான் போலீஸ் வேன் மீது தற்கொலை தாக்குதல்.. 9 போலீஸார் பலி
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள காம்ப்ரி பாலத்தில் வேன் சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி வேனின் மீது வேகமாக பைக்கை மோதினான்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலீஸ் வேன் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில் 9 போலீஸார் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.
ஏற்கனவே பஞ்சத்தாலும், வறுமையாலும் பாகிஸ்தான் மக்கள் நிலைக்குலைந்திருக்கும் சூழலில், இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களும் அங்கு அதிகரித்து வருகின்றன.
இதனிடையே, பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கக்கூடும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

வறட்சியும் அட்டூழியமும்
பாகிஸ்தானில் வரலாறு காரணாத பஞ்சமும், வறட்சியும் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை உணவு கூட சாப்பிட முடியாத அவல நிலைக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசு முழுவதுமாக திவாலாகிவிட்ட நிலையில், ராணுவ வீரர்களுக்கு கூட உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பரிதாபகரமான சூழலில், பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கூட பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 101 பேர் உயிரிழந்தனர்.

போலீஸ் வேன்
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்கள் என அழைக்கப்படும் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கம் பொறுப்பேற்றது. இந்த சூழலில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மற்றொரு பயங்கர தாக்குதல் சம்பவத்தை தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். பலூசிஸ்தானின் போலான் பகுதியில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட போலீஸார் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

புல்வாமா பாணியில்..
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள காம்ப்ரி பாலத்தில் வேன் சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி வேனின் மீது வேகமாக பைக்கை மோதினான். இதில் அடுத்த நொடியே சக்திவாய்ந்த குண்டு வெடித்து வேன் பல அடி தூரத்துக்கு தூக்கியெறியப்பட்டது. காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட பாணியில் இந்த தற்கொலை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலில் வேனில் இருந்த 9 போலீஸார் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் தலிபான்கள்
20-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து காயமடைந்த போலீஸாரை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாத அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியிருக்கும் என பாகிஸ்தான் ராணுவம் சந்தேகிக்கிறது. இதுகுறித்து போலீஸார், ராணுவத்தினர் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications