இங்கிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல்.. 2 சிறுவர்கள் பலி.. 9 பேர் காயம்.. ஷாக் சம்பவம்
லண்டன்: இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் செயல்பட்டு வரும் நடன பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 17- வயது சிறுவன், கத்தியால் அங்கிருந்த சிறுவர்களை தாக்கியுள்ளான். இதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். இங்கிலாந்தை இந்த சம்பவம் அதிர வைத்துள்ளது.
இங்கிலாந்தின் கடலோர பகுதியில் அமைந்துள்ள நகரம் சவுத்போர்ட் ஹார்ட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில், குழந்தைகளுக்கான நடன பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான சிறுவர்களும் சிறுமிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் நடன பயிற்ச்சி பள்ளிக்குள் புகுந்த 17-வயது சிறுவன் திடீரென அங்கிருந்த குழந்தைகளை கத்தியால் தாக்கினான். இதனைப்பார்த்த சிலர் இந்த கத்திக்குத்து தாக்குதலை தடுக்க முற்பட்டனர். இதில் தடுக்க முற்பட்டவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கிலாந்தை இந்த சம்பவம் அதிர வைத்துள்ளது. கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், 17-வயது சிறுவனை கைது செய்துள்ளனர். அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பயங்கரவாத தாக்குதலாக இதை கருதவில்லை என போலீசார் முதல்கட்ட விசாரணை அடிப்படையில் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 17-வயது சிறுவன் கார்டிப் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவனிடம் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். கத்திக்குத்து தாக்குதலில் சிறுவர்கள் பலியான சம்பவத்திற்கு இங்கிலாந்து மன்னரும் பிரதமரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications