எல்ஜிபிடிக்யூ இயக்கங்களுக்கு தடை.. செயற்பாட்டாளர்கள் எல்லோரும் தீவிரவாதிகள்! ரஷ்யா அறிவிப்பு
மாஸ்கோ: ரஷ்யாவில் ஏற்கெனவே பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது LGBTQ இயக்கங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாற்று பாலினத்தவர்கள்: உலகம் முழுவதும் மாற்று பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இவர்களால் ஒட்டுமொத்த மனித குலத்திற்கே ஆபத்து என தொடர்ந்து தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஏறத்தாழ அனைத்து மதங்களும் இவர்களின் திருமணங்களை அங்கீகரிப்பதில்லை. மட்டுமல்லாது இவர்கள் உலகில் சபிக்கப்பட்டவர்கள் என்றே கூறி வந்திருக்கிறது. இப்படி இருக்கையில், தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்கான அடிப்படை அம்சங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

தடை: இப்படி இருக்கையில், உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் மாற்று பாலினத்தவர்களுக்கான இயக்கங்கள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்னர் அங்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அந்நாட்டின் அரசு அதிகாரிகள் கூறுகையில்,
சதி: "பாரம்பரியங்களை சரியாக கடைபிடித்து வரும் ஒரே ஐரோப்பிய நாடு நாங்கள் மட்டும்தான். இந்த LGBTQ இயக்கங்கள் என்பது முழுக்க முழுக்க மேலை நாடுகளின் சதி. அவர்கள் எங்களது சந்ததியினரை சீர்குலைக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனவே இதை அனுமதிக்க முடியாது. LGBTQ உரிமைகளை பேசுவது அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணில் அதை அனுமதிக்க முடியாது" என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் நீதித்துறை சார்பில் உச்சநீதிமன்றத்திற்கு LGBTQ இயக்கங்கள் தடை குறித்து பரிந்துரைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம்: இந்த பரிந்துரையை ஏற்றுள்ள உச்சநீதிமன்றம் தடையை அறிவித்திருக்கிறது. மட்டுமல்லாது LGBTQ செயற்பாட்டாளர்கள் தீவிரவாதிகள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மத முரண்களை தூண்டுவதாகவும், தீவிரவாத நோக்குடன் இந்த செயல்பாட்டளர்கள் இயங்குவதாகவும் அந்நாட்டின் நீதித்துறை LGBTQ செயற்பாட்டாளர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது. மேலும், "LGBTQ இயக்கங்களை எதிர்ப்பதில் ரஷ்யா உறுதியாக இருக்கிறது. பாரம்பரியமற்ற பாலியல் உறவுகள் குறித்து ரஷ்யா ஆழ்ந்த கவலையை கொண்டிருக்கிறது" என்றும் நீதித்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சோவியத்: பாலின பேதங்களை கடந்து உலகில் முதன் முறையாக பெண்களை விண்வெளிக்கு அனுப்பியது சோவியத் ரஷ்யாதான். இப்படி இருக்கும் போது இதே நாட்டில் மாற்று பாலின இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. அடுத்த ஆண்டு ரஷ்யாவில் அதிபர் தேர்தல் வருகிறது. இந்த முறையும் புதின்தான் அதிபராக போட்டியிட இருக்கிறார். எனவே பழமைவாதிகளின் வாக்குகளை கவர்வதற்காக இதுபோன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யா: இனி ரஷ்யாவில் மாற்று பாலினத்தை சேர்ந்த குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. அதேபோல இதற்கு முன்னர் மாற்று பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்திருந்தாலும் அந்த திருமணம் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications