அமெரிக்க படைகளுக்கான கெடு நாளை முடிகிறது- ஐஎஸ்.ஐஎஸ் தாக்குதல் தீவிரமாகுமா? யுத்த பூமியாகுமா ஆப்கான்?
காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற தாலிபான்கள் விதித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது. அமெரிக்க படைகள் வெளியேறிய உடனேயே ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே அமைப்பு தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தினால் ஆப்கானிஸ்தான் மீண்டும் ரத்த ஆறு ஓடும் யுத்த பூமியாக உருமாறும் அபாயம் உள்ளது.
2001-ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் தகர்த்தது. இந்த பயங்கரவாத தாக்குதலில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.
உலக வல்லரசான தங்களையே அலற வைத்த அல்கொய்தாவின் கதையை முடிக்க ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள். அமெரிக்கா படைகளை எதிர்கொள்ளாமல் அன்று ஆட்சியில் இருந்த தாலிபான்கள் 1.0 பின்வாங்கினர்.

அமெரிக்கா ராணுவம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஷரியா இஸ்லாமிய சட்டப்படியான ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்தது. ஆப்கான் ராணுவத்துக்கு பக்க பலமாக தாலிபான்களுடன் மோதியது அமெரிக்க படைகள். பல்லாயிரக்கணக்கான அமெரிக்க ராணுவத்தினர் உயிரை இழந்தும் கூட தாலிபான்களை ஒழிக்க முடியவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தமது படைகளை திரும்பப் பெற முடிவு செய்தது.

ஆப்கான் ராணுவம் சரண்
இதன்படி அமெரிக்க ராணுவம் வெளியேற தொடங்கியது. தாலிபான்களை ஆப்கானிஸ்தான் ராணுவம் எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் அமெரிக்கா வெளியேறியது. ஆனால் நடந்த கதையோ வேறாகிப் போனது. தாலிபான்கள் ஒவ்வொரு மாகாணமாக முன்னேற எதிர்த்து யுத்தம் செய்ய வேண்டிய ஆப்கான் ராணுவமோ சரணாகதி அடைந்தது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு நாட்டைவிட்டே தப்பி ஓடினர். ஆப்கான் ராணுவத்தின் ஒரு பகுதியினர் பஞ்சசீர் மாகாணத்தில் தாலிபான்களை எதிர்க்கும் முஹாதீன்களின் வடக்கு படையுடன் கை கோர்த்தனர்.

தாலிபான்கள் வசமான ஆப்கான்
இதனால் ஆப்கான் ராணுவ வசம் இருந்த அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அத்தனையும் அப்படியே தாலிபான்கள் கைகளுக்குப் போனது. எந்த ஒரு எதிர்ப்பையும் எதிர்கொள்ளாமல் அப்படியே ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்கள் தாலிபான்கள் வசமாகின. தலைநகர் காபூலும் தாலிபான்கள் பிடிக்குப் போனபோது அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டே தப்பி ஓடிவிட்டார். இப்போது ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் பிடியில் சிக்கிவிட்டது. புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக தாலிபான்கள் 2.0 பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ்.கே
ஆனாலும் தாலிபான்களுக்கு குடைச்சல் கொடுக்க வடக்கு படை முஜாஹிதீன்கள் போல, ஐ.எஸ்.ஐ.எஸ்-கே பயங்கரவாத இயக்கமும் இப்போது கோதாவில் குதித்திருக்கிறது. தலைநகர் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியது இந்த இயக்கம். இந்த தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தாக்குதல்களை நிறுத்தாமல் நடத்தி கொண்டே இருக்கிறது இந்த பயங்கரவாத இயக்கம். இந்த தாக்குதல்களை அமெரிக்க படைகள் முறியடித்தும் வருகின்றன. இந்த நிலையில் ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தாலிபான்கள் விதித்திருந்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.

என்னவாகுமோ ஆப்கான்?
உலக நாடுகள் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தும் அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என திட்டவட்டமாக தாலிபான்கள் மறுத்துவிட்டனர். அமெரிக்க படைகள் நாளை வெளியேறும் நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.கே இயக்கம் தமது தாக்குதல்களை தீவிரப்படுத்தலாம். அதே போல் தாலிபான்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் பஞ்சசீர் மாகாணத்து வடக்கு படை முஜாஹிதீன்களுடன் தாலிபான்கள் யுத்தம் நடத்தலாம். இதனால் ஆப்கானிஸ்தான் தேசமானது ரத்த ஆறும் யுத்த பூமியாக உருக்குலைந்து போகும் அபாயம் உள்ளது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் 20 ஆண்டுகள் அரும்பாடு பட்டு ஆப்கானிஸ்தானை மீளக் கட்டியமைத்த அத்தனையும் பாழாய் போகிற பேராபத்தை ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications