‘சகுனி’ வேலை பார்க்க முயன்ற பாகிஸ்தான்.. இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என ஆப்கானிஸ்தான் மறுப்பு!
காபூல்: ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள்ளும் நுழைந்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று ஆப்கானிஸ்தான் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்தியாவின் தாக்குதல் எல்லையைத் தாண்டி ஆப்கானிஸ்தான் மண்ணிலும் ஏவுகணைகள் வீசப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு மறுத்துள்ளது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது இந்தியா.
இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இந்திய பகுதிகளின் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது பாகிஸ்தான். இதற்கு இந்தியப் படை பதிலடி கொடுத்து வருகிறது, பாகிஸ்தானின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று அதிகாலையில் பாகிஸ்தான் விமானப் படை தளங்களை குறி வைத்து தாக்கியது.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதனை இந்தியா மறுத்திருந்த நிலையில், ஆப்கானிஸ்தானும் தற்போது மறுத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானின் பொய்யான குற்றச்சாட்டு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இனயதுல்லா கவரிஸ்மி ஆப்கானிஸ்தான் மண்ணில் இந்திய ஏவுகணைத் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்பதை திட்டவட்டமாக மறுத்தார். "இந்த கூற்றுக்கள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை" என்று கவரிஸ்மி கூறி உள்ளார். காபூலுக்கும் டெல்லிக்கும் இடையில் ராஜதந்திர முரண்பாட்டை விதைக்க ஜோடிக்கப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் வெளியுறவுத்துறை, ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் எதிரிகளைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள் என்றும், சமீபத்திய ஆண்டுகளில் எந்த நாடுகள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறி வருகின்றன என்பதை அவர்களால் உணர முடியும் என்றும் தெரிவித்துள்ளது. "ஆப்கானிஸ்தான் மக்களுக்கு, அவர்களின் குடிமக்கள் மற்றும் உள்கட்டமைப்பை யார் மீண்டும் மீண்டும் குறிவைத்துள்ளனர் என்பதை நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை" என்று அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானின் அறிக்கைகள் அபத்தமானவை. இந்தக் குற்றச்சாட்டுகள் தவறான தகவல்களின் திட்டமிட்ட பிரச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. இந்த பொய் பாகிஸ்தான் அரசால் வேண்டுமென்றே ஊக்குவிக்கப்படும் பிரச்சாரத்தின் ஒரு பகுதி" என்று கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications