பிரபலங்களை கொல்ல சதி: சுபியானை அடுத்து மேலும் 3 தீவிரவாதிகளை நாடு கடத்தும் சவுதி
ரியாத்: லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த அபு சுபியானை அடுத்து இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஜெயினுல் ஆபிதீன் என்பவரை சவுதி அரேபியா நாடு கடத்த உள்ளது.
தேசிய புலனாய்வுத் துறை சவுதி அரேபியாவில் இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு சுபியானை நாடு கடத்துமாறு சவுதி அரசை கேட்டுக் கொண்டது. அதன் கோரிக்கையை ஏற்று சவுதி அரசு சுபியானை இந்தியாவுக்கு நாடு கடத்தியது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சுபியான் மும்பை அழைத்து வரப்பட்டு அங்கிருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்டார்.

கர்நாடகாவில் பத்திரிக்கையாளர்கள் உள்பட பல பிரபலங்களை கொலை செய்யத்திட்டமிட்ட வழக்கில் சுபியான் தேடப்பட்டு வந்தார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேசிய புலனாய்வுத் துறையினர் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய புலனாய்வுத் துறையினரின் வேண்டுகோளின்படி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஜெயினுல் ஆபிதீன் என்பவரை நாடு கடத்த உள்ளது சவுதி அரசு. மேலும் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இரண்டு பேரும் சவுதியில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு நிதி அளித்தது, ஹைதராபாத் சாய் பாபா கோவில் குண்டுவெடிப்பு, ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் மற்றும் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டது ஆகிய வழக்குளை தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகிறார்கள். லஷ்கர் இ தொய்பா மற்றும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் பலர் சேர்ந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் பெங்களூரில் பத்திரிக்கையாளர்கள் உள்பட பல பிரபலங்களை கொலை செய்ய தீட்டிய சதி திட்டத்தை 2011ம் ஆண்டு பெங்களூர் போலீசார் முறியடித்தனர்.
இந்த வழக்கை பெங்களூர் போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வுத் துறை எடுத்துக் கொண்டது. இந்தியாவில் உள்ள பல பிரபலங்களை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டது தெரிய வந்தது. சுபியான், ஆபிதீன் மற்றும் 3 பேர் ரியாத்தில் கூடிப் பேசி பிரபலங்களை கொலை செய்ய சிலருக்கு உத்தரவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications