தாலிபான்களுக்கு அல்கொய்தா பாராட்டு- காஷ்மீர் உள்ளிட்ட முஸ்லிம்கள் நிலங்களையும் விடுவிக்கனுமாம்!
காபூல்: ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ள தாலிபான்களுக்கு அல்கொய்தா இயக்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீர், பாலஸ்தீன் உள்ளிட்ட முஸ்லிம் நிலங்களும் விடுதலை பெற வேண்டும் என்றும் அல்கொய்தா தெரிவித்துள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதால் அந்த நாடு தாலிபான்கள் பிடியில் சிக்கி இருக்கிறது. தாலிபான்களை உலக நாடுகள் உடனே அங்கீகரிக்கவும் தயங்கி வருகின்றன.
இதனால் அல்கொய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு அடைக்கலம் தரக் கூடாது எனவும் சர்வதேச நாடுகள் வலியுறுத்துகின்றன. இந்தியாவும் ஆப்கான் மண்ணை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க கூடாது என நெருக்கடி கொடுத்துள்ளது.

தாலிபான்களும் தங்களது புதிய அவதாரமாக கருதிக் கொண்டு இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளிடமும் நட்புக்கரம் நீட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான் தாலிபான்களுக்கு அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான அறிக்கையில், பாலஸ்தீனம், காஷ்மீர், சோமாலியா, ஏமென் என முஸ்லிம் நிலங்கள் அனைத்தும் இஸ்லாமிய எதிரிகளிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.
மேலும் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்; அல்லாவின் கருணையால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றி பெற்றுள்ளனர் எனவும் அல்கொய்தா இயக்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1996-2001-ல் தாலிபான்கள் ஆட்சிக் காலத்தில் ஒசாமா பின்லேடனை தலைவராக கொண்ட அல்கொய்தா இயக்கம் ஆப்கானில் பாதுகாப்பாக இருந்தது. அப்போதுதான் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை அல்கொய்தா நடத்தியது. இதனையடுத்தே ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா படைகள் நுழைந்தன. 20 ஆண்டுகளாக தாலிபான்களுக்கும் அமெரிக்கா படைகளுக்குமான யுத்தம் நிகழ்ந்தது. இப்போது தாலிபான்கள் மீண்டும் தலையெடுத்த நிலையில் அல்கொய்தா அவர்களுடன் கை கோர்ப்பதை உலகம் உன்னிப்பாக பார்த்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications