அணு ஆயுதத்தை கையிலெடுக்கும் ரஷ்யா.. உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா.. யாரிடம் அணுஆயுதம் அதிகம் உள்ளது?
மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் சந்தேகிக்கிறார். இதனால் ரஷ்யாவில் அணு ஆயுத பயிற்சிக்கு விளாடிமிர் புதின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி உலகில் உள்ள அணுஆயுதங்களில் 88 சதவீதம் இந்த 2 நாடுகளிடம் தான் இருப்பதும், அமெரிக்காவை விட ரஷ்யாவிடம் தான் அதிக அணுஆயுதம் உள்ளது என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அடுத்த ஆண்டு பிப்வரி மாதம் வந்தால் போர் தொடங்கி 3வது ஆண்டு நிறைவு பெறும். இந்நிலையில் தான் தற்போது உக்ரைன் போர் என்பது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. அதாவது ரஷ்யா அணுஆயுத பயிற்சியை தொடங்கி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா தான். அதாவது உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உதவி செய்து வருகிறது. இதற்கிடையே தான்விரைவில் அமெரிக்கா உதவியுடன் உக்ரைன், ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்று புதின் சந்தேகிக்கிறார்.
இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்ய படைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி ரஷ்யாவில் அணுஆயுத பயிற்சிகளை தொடங்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக புதின், ‛‛புவிசார் அரசியலில் பதற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவுக்கு வெளிப்புறத்தில் இருந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அதோடு தேவையான அனைத்து பயிற்சிகளையும் தொடங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் அணுஆயுத பயிற்சியும் அடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அணுஆயுதங்கள் மூலம் மோதல் வெடித்தால் அது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இதனால் உலக நாடுகளும் ரஷ்யாவின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் உலகில் எந்த நாட்டில் அதிக அணு ஆயுதங்கள் உள்ளது. குறிப்பாக ரஷ்யா, அமெரிக்காவிடம் எவ்வளவு அணுஆயுதங்கள் உள்ளது? என்பது பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக எப்ஏஎஸ் (FAS) எனும் Federation of American scientists இணையதளம் 2024ம் ஆண்டின் அடிப்படையில் கூறியுள்ளதாவது: 2024ம் ஆண்டின் நிலவரப்படி ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா என்று மொத்தம் 9 நாடுகளிடம் அணுஆயுதங்கள் உள்ளன.
இந்த நாடுகளிடம் 12,121 அணுஆயுதங்கள் (Warheads) இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக ரஷ்யாவிடம் 5,580 அணுஆயுதங்களும், அடுத்தப்படியாக அமெரிக்காவிடம் 5,044 அணுஆயுதங்களும் உள்ளன. சீனாவிடம் 500, பிரான்ஸிடம் 290, பிரிட்டனிடம் 225, இந்தியாவிடம் 172, பாகிஸ்தானிடம் 170, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 50 என்று அணு ஆயுதங்கள் உள்ளன.
அதன்படி பார்த்தால் உலகில் உள்ள மொத்த அணுஆயுதத்தில் 88 சதவீதம் என்பது ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய 2 நாடுகளிடம் தான் உள்ளது. அதில் 84 சதவீதம் என்பது ராணுவம் மற்றும் போர்க்கப்பல் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு 100 அணு ஆயுதங்களே போதும். ஆனால் இந்த பட்டியலில் இஸ்ரேல், வடகொரியாவை தவிர பிற நாடுகள் அனைத்தும் அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை கொண்டுள்ளன.
இதனால் மக்களின் பாதுகாப்பு கருதி சமீபகாலமாக அணு ஆயுதங்களை ஒவ்வொரு நாடுகளும் குறைத்து வந்தன. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களின் கையிருப்பை குறைத்தன. ஆனாலும் கடந்த 30 ஆண்டுகளில் அணுஆயுதங்களின் இருப்பை குறைக்கும் சதவீதம் என்பது சரிந்துள்ளது.
குறிப்பாக பிரான்ஸ், இஸ்ரேல் தங்களிடம் இருக்கும் அணுஆயுதங்களின் எண்ணிக்கையை குறைப்பது மற்றும் அதிகரிப்பது ஆகிய செயல்களில் ஈடுபடவில்லை. ஆனால் சீனா, இந்தியா வடகொரியா, பாகிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அணுஆயுதங்களை அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமின்றி உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு இடையே ரஷ்யாவும் அணுஆயுத பெருக்கத்தை மேற்கொண்டுள்ளது என்பது கவலையளிக்கும் விஷயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகில் 12,121 அணு ஆயுதங்கள் இருந்தாலும் கூட 9,585 அணுஆயுதங்கள் தான் பயன்படுத்தும் நிலையில் ராணுவ நிலைகளில் பாதுகாக்கப்படுகின்றன. மற்றவைகள் ஓய்வு நிலையில் உள்ளன. இந்த அணுஆயுதங்கள் அகற்றப்பட அந்தந்த நாடுகளில் இருந்து அகற்றப்பட வேண்டும். இருப்பினும் தற்போது வரை அகற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளன.
மேலும் தற்போது வெளியாகி உள்ள இந்த அணுஆயுதங்களின் எண்ணிக்கை என்பது துல்லியமானது இல்லை. ஒவ்வொரு நாடுகளிடம் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் பற்றிய விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் உள்ளன. உதாரணமாக அமெரிக்காவை எடுத்து கொண்டால் 2010 முதல் 2018 வரை அணுஆயுத கையிருப்பை வெளிப்படையாக தெரிவித்தது. அதன்பிறகு 2019ல் டொனால்ட் டிரம்ப் அரசு அந்த தகவலை மறைக்க தொடங்கியது.
அதன்பிறகு மீண்டும் 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் ஜோ பைடன் அரசு அணுஆயுத இருப்பில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொண்டது. ஆனால் பிற நாடுகள் இன்னும் கூட வெளிப்படைத்தன்மையுடன் இல்லை. இதனால் மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் தோராயமானதாகும். இதில் கூறப்பட்டுள்ள அளவை விட கொஞ்சம் கூடுதலாக அல்லது சற்று குறைவாக பிற நாடுகள் அணு ஆயுதங்களை கையில் வைத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image credit: Federation of American scientists












Click it and Unblock the Notifications