அபுதாபி மாலில் டாய்லெட் சண்டையில் அமெரிக்க ஆசிரியையை குத்திக் கொன்ற பெண்
அபுதாபி: அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் பள்ளி ஆசிரியையான அமெரிக்க பெண்ணை இன்னொரு பெண் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அந்த ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
கத்தியால் குத்தியவர் பர்தா அணிந்திருந்ததால் அவர் யார் என்பது தெரியவில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண். விவாகரத்தான அவர் தனது 11 வயது இரட்டையர் மகன்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தங்கி பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்து வந்தார். அபுதாபியின் ரீம் ஐலேண்டில் உள்ள பவ்டிக் ஷாப்பிங் மாலுக்கு திங்கட்கிழமை சென்றுள்ளார். அங்கு கழிவறை தொடர்பாக அவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஃபர்தா அணிந்த பெண் ஆசிரியையை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த பெண் உடனடியாக ஷேக் கலிபா மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளியை தேடி வருகிறார்கள். ஃபர்தா அணிந்து, கையுறைகள் அணிந்திருந்தது ஆணா, பெண்ணா என தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அபுதாபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.